தீபாவளி முன்பணம் என்னாச்சு? பஸ் தொழிலாளர்கள் ஆவேசம்
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். முக்கிய பண்டிகையின் போது ஒரு மாதத்துக்கு முன்பு அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் முன்பணமாக வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த தீபாவளிக்கு முன்பணம் இதுவரை வழங்கப்படவில்லை என போக்குவரத்து தொழிலாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிஐடியு மாநகர தலைவர் சேகர் கூறியதாவது: கடந்த 2011ம் ஆண்டு வரை பண்டிகை முன்பணம் என ரூ.2,000 வழங்கப்பட்டது. 2012ம் ஆண்டு முதல் ரூ.5,000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் யார் யாருக்கு வேண்டும் என பட்டியல் தயாரிக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கு முன்பே போக்குவரத்து முதன்மை செயலாளருக்கு அனுப்பப்பட்டது.
அங்கிருந்து நிதித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்துத்துறையில் பணம் இருந்தால், பண்டிகை முன்பணத்தை வழங்கிக் கொள்ளட்டும் என நிதித்துறை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், முன்பணம் வழங்காதது கண்டிக்கத்தக்கது என்றார்.அகவிலைப்படியிலும் ஏமாற்றம் மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். ஆனால் போக்குவரத்துத்துறையை மட்டும் தொடர்ந்து தமிழக அரசு வஞ்சித்து வருகிறது என தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வும் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.