அதிமுகவினர் கோஷ்டி மோதல்: பெட்ரோல் குண்டு வீசி ரகளை
தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலையைச் சேர்ந்தவர் முத்துலிங்கம். அப்பகுதி அதிமுக கிளை செயலாளராக உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன், பெங்களூர் ஐகோர்ட்டில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த முத்துலிங்கம், அன்று குடிபோதையில் கெங்கவல்லி - ஆத்தூர் ரோட்டில் பஸ் மற்றும் வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டார்.அவரை அதிமுக பிரமுகர்கள் தடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சமாதானம் செய்துள்ளனர். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டு முத்துலிங்கத்தை அதிமுக பிரமுகர்கள் தாக்கி உள்ளனர்.
இந்நிலையில் இந்த பிரச்னைக்கு மற்றொரு அதிமுக பிரமுகரான சம்பத் என்பவர் தான் காரணம் என்று கருதிய முத்துலிங்கத்தின் உறவினர்கள் மணி, வெங்கடேஷ், உமாசங்கர், கண்ணன், முத்துசாமி ஆகியோர் நேற்று இரவு அப்பகுதியில் கடையில் நின்று கொண்டிருந்த சம்பத்தை தாக்க முயன்றுள்ளனர். மேலும் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை ரோட்டில் போட்டு உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரோட்டில் தீப்பற்றி எரிந்தது. சாலையில் நடந்து சென்றவர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் திரண்டு ரகளையில் ஈடுபட்ட 5 பேரையும் மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவர்களை கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று ஒப்படைத்து புகார் செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.