புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தனியாக மனு செய்துள்ளனர். இந்த மனுக்கள் வரும் செவ்வாய்கிழமை விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிகிறது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இந்த வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரும் பெங்களூர் மத்திய சிறையான பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் ஜாமீன் கேட்டு பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரா மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த 7ம் தேதி உத்தரவிட்டார். மேலும் தனி நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை அக்டோபர் 27ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய அதிமுக வக்கீல்கள் முடிவு செய்தனர். குறிப்பிட்ட சில வக்கீல்கள் ஜெயலலிதாவை பரப்பன அக்ரஹார சிறையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அவரது அறிவுறுத்தலின் அடிப்படையில் அதிமுக வக்கீல்கள் புதுடெல்லி சென்று அங்கு மூத்த வக்கீல்கள் சிலரிடம் ஆலோசனை நடத்தினர். ஜாமீன் மனுவைத் தயாரிக்கும் பணி நேற்று முன்தினம் முழுவதும் நடந்தது. இதனால், மனுத் தாக்கல் செய்வதில் ஒரு நாள் தாமதம் ஆனது. இந்நிலையில் ஜாமீன் கோரி ஜெயலலிதா சார்பில் நேற்று உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா மூத்த குடிமகள். அவருக்கு வயது 66 ஆகிவிட்டது. அவரது வயதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். தனி நீதிமன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளோம். அந்த அப்பீல் மனு மீது விசாரணை முடிவடைய நீண்ட காலம் ஆகலாம். அதுவரை அவர் சிறையிலிருப்பது சரியான நடைமுறை இல்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஜாமீன் மனுவில் கூறப்பட்டுள்ளது.ஜெயலலிதாவுக்கு மட்டுமே ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்யப்படவில்லை. அவர்களுக்கு ஜாமீன் கேட்டு இன்று மனு தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதேநேரத்தில், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரலாம் என்று அதிமுக வக்கீல்கள் தரப்பில் கூறப்படுகிறது. இன்று விசாரணைக்கு வரவில்லை என்றால் வரும் செவ்வாய் கிழமை விசாரணைக்கு வரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் ஹரீஸ் சால்வே ஆஜராவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை உடனடியாக விசாரிக்க வேண்டும் என அவரது வக்கீல்கள் இன்று காலை உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கவில்லை. இதனால் வரும் செவ்வாய்கிழமை ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தனித்தனியாக மனு செய்திருந்தபோதிலும் ஒரே வழக்கு தொடர்புடைய மனு என்பதால் உச்சநீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்போது அரசு தரப்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு விசாரணை நடத்தப்படும். அதன் பின்னரே ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கப்படும். இந்த நடைமுறைக்கே பல நாட்கள் ஆகும் என்பதால் உடனடியாக ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை. மேலும் 18-ம் தேதி தீபாவளி விடுமுறை ஆரம்பிப்பதால் தீபாவளிக்கு பின்னரே (22ம் தேதிக்கு பிறகு) ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.