திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிந்து மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்தார். இன்றி இரவு கருடசேவை நடக்கிறது.திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றிரவு ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலையப்ப சுவாமி சர்வ பூபால வாகனத்தில் பவனி வந்தார். 5ம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, தங்க கிளி, பட்டுச்சேலையை அணிந்து நான்கு மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருடன் ஸ்ரீகிருஷ்ணர் பல்லக்கும் உலா வந்தது.
மோகினி அவதாரம்: மந்திர பருவத மலையை தேவர்களும், அசுரர்களும் பார்கடலில் கடைந்த போது வந்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் வழங்குவதற்காக மகாவிஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்தார். அசுரர்களை மயங்க வைத்து விட்டு தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கினார். இதை விளக்கும் வகையில் மோகினி உற்சவம் நடக்கிறது. ஆண்டாள் மாலை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து நேற்று பச்சைக் கிளியுடன் கூடிய மாலை, பட்டுச்சேலை கொண்டு வரப்பட்டு இன்று காலை சுப்ரபாத சேவைக்கு பிறகு மூலவரான வெங்கடேச பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது. இதேபோல் மோகினி அலங்காரத்தில் வந்த மலையப்ப சுவாமிக்கும் ஆண்டாள் சூடிகொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது.
கருட சேவை: பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் கருட சேவை உற்சவம் இன்றிரவு 8 மணியளவில் நடைபெறுகிறது. தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி மகாவிஷ்ணு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கருடசேவையின்போது மூலவர் வெங்கடேச பெருமாளுக்கு தினம்தோறும் அணிவிக்கப்படும் லட்சுமி ஆரம், மகரகண்டி ஆரம் இன்று சுவாமிக்கு அணிவிக்கப்படுகிறது. திருப்பதி பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான நேற்று ஒரே நாளில் பக்தர்கள் ரூ.2 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரம் காணிக்கையாக செலுத்தி யிருந்தனர்.லட்சக்கணக்கானபக்தர்கள் குவிந்தனர்கருடசேவையை தரிசித்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது.
இதனால் இன்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் நிரம்பி உள்ளனர். இதற்கிடையில், கடந்த 3 நாட்களாக அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் வழக்கத்தைவிட அதிகளவு பக்தர்கள் வந்தபடி உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை மலைப்பாதை பக்தர்கள் தங்களை விரைவில் தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதாதல் 300 ரூபாய் டிக்கெட் உள்பட அனைத்து கட்டண டிக்கெட் மற்றும் திவ்ய தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கருடசேவைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால் போலீஸ் கெடுபிடி அதிகரித்துள்ளது. அனைத்து இடங்களிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. தங்கும் அறைகள் கிடைக்காததால் பக்தர்கள் கடும் குளிரில் சாலை மற்றும் பூங்கா பகுதிகளில் குழந்தைகளுடன் அவதிப்பட்டனர்.