சென்னை: தமிழகம் முழுவதும் 2 மேயர் உள்பட 530 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. முடிவுகள் மதியம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர், 4 நகராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி ஊராட்சிகளில் காலியாக உள்ள 530 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடைபெற்றது. தேர்தலை திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட 9 கட்சிகள் புறக்கணித்தன. அதிமுக, பாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலை சந்தித்தன. பாஜவுக்கு, தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. முதன் முதலாக தமிழக தேர்தல் களத்தில் அதிமுகவும், பாஜவும் நேருக்கு நேர் மோதின. நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்ட பாஜ வேட்பாளர் வெள்ளையம்மாள் திடீரென மனுவை வாபஸ் பெற்றதால், அதிமுக மேயர் வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வானார். அதேபோல் புதுக்கோட்டை, கொடைக்கானல், குன்னூர் உள்பட 4 நகராட்சி தலைவர்கள், ஒரு பேரூராட்சி தலைவர், 4 மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், 30 நகராட்சி உறுப்பினர்கள், 64 பேரூராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தூத்துக்குடி, கோவை ஆகிய 2 மேயர்கள், 8 மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 நகராட்சி தலைவர்கள், 23 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 6 பேரூராட்சி தலைவர்கள், 39 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் என 530 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 25 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 99 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு 270 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 775 பேரும், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை பொறுத்தவரை மேயர்கள், மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 317 பேர் என மொத்தம் 1,486 பேர் போட்டியிட்டனர். கோவை மேயர் தேர்தலில் கணபதிராஜ்குமார்(அதிமுக), நந்தகுமார்(பாஜ), பத்மநாபன்(மார்க்சிஸ்ட்) மற்றும் சுயேச்சைகள் உட்பட 16 பேர் போட்டியிட்டனர். தூத்துக்குடி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேஸ், பாஜ வேட்பாளர் ஜெயலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 5 பேர் உட்பட மொத்தம் 7 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் ஊரக பகுதிகளில் 67.99 சதவீதமும் நகர்புற பகுதிகளில் 63.57 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. பதற்றமான பகுதிகளாக கண்டறியப்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகள் முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. கோவை மேயர் தேர்தலில் பதிவான வாக்குகள் தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் எண்ணப்படுகின்றன. தூத்துக்குடி மேயர் தேர்தலில் பதிவான வாக்குகள் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் எண்ணப்படுகின்றன.
உள்ளாட்சி இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா நடந்ததாகவும், வேட்பாளர்களை அதிமுகவினர் தாக்கியதாகவும் பாரதிய ஜனதா குற்றம்சாட்டியது. தமிழகத்தில் மொத்தம் 307 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது. முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான முடிவுகள் நாளை மதியத்துக்குள் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் 2 இடங்களில் எண்ணிக்கை
சென்னை மாநகராட்சி மண்டலம் 4க்கு உட்பட்ட 35வது வார்டுக்கான இடைத்தேர்தலில் மொத்தம் 45 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதில் 12696 ஆண்களும், 10615 பெண்களும் என மொத்தம் 23,311 பேர் வாக்களித்தனர். 35வது வார்டில் பதிவாகியுள்ள வாக்குகள் வியாசர்பாடி, சர்மா நகரில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.