சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு காரணம் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலின் அளவு வெகுவாக குறைந்துவிட்டதுதான் என கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 11,503 தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.23ம், எருமை பாலுக்கு ரூ.31 கொள்முதல் விலையாக வழங்கப்பட்டு வருகிறது. இதை முறையே ரூ.30, ரூ.40 ஆக உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. அதேநேரத்தில் தனியார் பால் நிறுவனங்கள் ஆவின் நிறுவனத்தை விட லிட்டருக்கு ரூ.7 வரை கூடுதலாக விலை தருகின்றன. எனவே, ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி வந்த பலரும் தற்போது தனியார் நிறுவனங்களுக்கு மாறியுள்ளனர்.
இதனால் 2012-13 ஆண்டில் நாள்தோறும் 24.36 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் கடந்த ஆண்டில் 23.22 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது. வறட்சி காரணமாகத் தான் பால் கொள்முதல் குறைந்ததாக அரசு கூறிவரும் போதிலும், பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு மாறியது தான் உண்மையான காரணம் என்று கூறப்படுகிறது. பால் உற்பத்திக்கான செலவு கடுமையாக அதிகரித்துவிட்ட நிலையில் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. எனவே, ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி போராட்டம் நடத்த ஆயத்தமாகி வரும் பால் உற்பத்தியாளர் சங்கங்களை அழைத்து தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.