சென்னை: பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை போலியாக அச்சடித்து பல லட்சம் சுருட்டிய அரசு ஊழியர் உள்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.சென்னையில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் போலி சான்றிதழ்கள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார், கூடுதல் துணை கமிஷனர் மோகன்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள், வியாசர்பாடி சத்தியமூர்த்தி (45), கொடுங்கையூர் ஞானவேல் (48) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் மோசடிக்கு மூளையாக செயல்பட்டது எம்ஜிஆர் நகரை சேர்ந்த கவுதமன் (57) மற்றும் அவரது மகன் லோகேஷ் (32) என தெரியவந்தது. அவர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி சான்றிதழ் தயாரிக்க பயன்படுத்திய 250க்கும் மேற்பட்ட கல்வித்துறை முத்திரைகள், சான்றிதழ்களில் ஒட்டப்படும் 20 ஆயிரம் ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள், 7 கம்ப்யூட்டர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சான்றிதழ்களை வைத்து சிலர் மத்திய, மாநில அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர். அவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறியவும், தலைமறைவான புரோக்கர்களை அடையாளம் காணவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக, கைது செய்யப்பட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து, அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.