போபால்: மத்திய பிரதேசத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.360 கோடிக்கு சொத்துகளை குவித்த ஐஏஎஸ் தம்பதியின் 110 ஏக்கர் நிலம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மத்திய பிரதேச மாநிலம், போபாலை சேர்ந்தவர் அரவிந்த் ஜோஷி. இவரது மனைவி டினு ஜோஷி. இவர்கள் இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகள். அரவிந்த் ஜோஷி சுமார் 32 ஆண்டுகளாக பணியில் இருந்து வருகிறார். இவரது மனைவி டினுவும் மத்திய அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். கடந்த 1988ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை பிரதமர் அலுவலகத்தில் டினு துணை செயலாளராக பணியாற்றினார். அரவிந்த், பாதுகாப் அமைச்சகத்தில் இணை செயலாளராக பணியாற்றினார்.இவர்கள் இருவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் குவித்ததாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து மத்திய பிரதேச லோக் ஆயுக்தா நீதிமன்றம் விசாரணை நடத்தி சுமார் 7 ஆயிரம் பக்க அறிக்கையை மாநில தலைமை செயலாளரிடம் சமர்ப்பித்தது. இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து வருமானவரித்துறையினர் நடத்திய விசாரணையில் இவர்களுக்கு ரூ.360 கோடிக்கு சொத்துகள் இருப்பது தெரிந்தது. போபால், டெல்லி, கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களில் 25 பிளாட்டுகளை வாங்கி குவித்திருந்தனர். சுமார் 400 ஏக்கர் நிலமும் உள்ளது. மேலும் ஏராளமான நிறுவனங்களில் கன்னாபின்னாவென்று முதலீடும் செய்துள்ளனர். மேலும் இவர்களது வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத கட்டுக்கட்டாக ரூ.3 கோடி பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.இந்தியாவிலேயே வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த ஐஏஎஸ் அதிகாரிகள் இவர்கள்தான் என கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு முதல் விசாரணை நடத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஜோஷி தம்பதிகளுக்கு சொந்தமான படேல் நகர் பகுதியில் உள்ள சுமார் 110 ஏக்கர் நிலங்களை நேற்று பறிமுதல் செய்தனர்.