பைப் லைனுக்கு பள்ளம் தோண்டியபோது வற்றாத பழங்கால கிணறு கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 6ம் வீதியில் கடந்த 3 நாட்களாக பிஎஸ்என்எல் கேபிளுக்கு பைப் லைன் அமைக்க சாலையின் ஓரத்தில் ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் பள்ளம் தோண்டியபோது திடீரென பெரிய கற்கள் ஜேசிபி இயந்திரத்தில் சிக்கின. அவற்றை அகற்றிவிட்டு பார்த்தபோது 20 அடி ஆழத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. தண்ணீர் ஊற்றுடன் இருந்தது. இதை பார்த்து மக்கள் வியப்படைந்தனர்.
தொண்டைமான் மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் புதுக்கோட்டையில் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டன. நகரின் பல பகுதிகளிலும் குளங்கள் வெட்டப்பட்டு மழைநீர் தேங்கி நிற்க வழிவகை செய்யப்பட்டது. ஆங்காங்கே வீடுகளிலும், பொது இடங்களிலும் கிணறுகள் வெட்டப்பட்டு செங்கல் கற்களால் கட்டி அந்த குடிநீரை மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். பராமரிப்பு இல்லாததாலும், நகர விரிவாக்கம், புதுபுது கட்டி டங்கள் கட்டியதாலும் பல கிணறுகள் மூடப்பட்டுவிட்டன. இதேபோல் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட கிணறும் சாலை அமைப்பதற்காக மூடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பழங்கால கிணற்றை பார்க்க மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.