சக்தியில்லையேல் சிவனில்லை... என்ற கூற்று உண்மையானது என்பதை உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் சக்தி தலங்கள் நிரூபித்து வருகின்றன. சிவபெருமானுக்கே சக்தி தந்து அகில உலகையும் அருள்பாலிக்கும் வல்லமை பார்வதிதேவிக்கு உண்டு. அவளின் சக்தி அளப்பரிய ஆற்றல் கொண்டது. உலக மக்கள் அனைவருக்கும் தாயாக விளங்கி அருள்பாலித்து வருகிறாள் பார்வதிதேவி. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்லையனூரில் புற்றுவடிவில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் அங்காள பரமேஸ்வரி.
ஒருமுறை சிவனை பார்க்க கைலாசமலைக்கு பிரம்மன் வந்தார். தூரத்தில் பிரம்மனை பார்த்த சக்திதேவி, பிரம்மனின் ஐந்து தலையை பார்த்து சிவன் என்று நினைத்து வணங்கினார். அருகில் வந்து பார்த்த பின்னர்தான் அது பிரம்மன் என்று தெரிந்தது. இதனால் பார்வதிதேவிக்கு கோபம் வந்தது. அதை மேலும் அதிகரிக்கும் வகையில் எனக்கும் ஐந்து தலை, சிவனுக்கும் ஐந்து தலை என எள்ளி நகையாடினான் பிரம்மன். இதனால் சிவபெருமான் மூலம் பிரம்மனின் ஐந்தாவது தலை வெட்டி அகற்றப்பட்டது. இதனால் கோபமடைந்த பிரம்மனின் மனைவி சரஸ்வதி, பராசக்தி மேல் கோபம் கொண்டு, சக்தி நீ அரண்மனையில் வாழ்ந்தாய். நீ இடமில்லாமல் அலைந்து புற்றையே வீடாக கொண்டு வாழ்வாய்.“ என்று சபித்தாள் கலைவாணி. அவளது சாபத்தால் பூமிக்கு வந்த பார்வதி இடமில்லாமல் அலைந்து திரிந்தாள்.
பல இடங்களுக்கு சென்று களைப்படைந்த பார்வதிதேவி அங்குள்ள நந்தவனத்தில் தவம் செய்ய தொடங்கினாள். அந்த இடத்துக்கு காவல் இருந்த மீனவர் ஒருவர், இந்த இடம் மலையரசன் என்ற அரசனுக்கு சொந்தமானது. அவருக்கு தெய்வநம்பிக்கை கிடையாது. இங்கிருந்து சென்றுவிடு என்று கூறினார். ஆனால் பார்வதிதேவி அங்கேயே தவம் செய்தாள். தன் உடலையும் புற்றுமண்ணால் மூடினாள். இதைக்கண்ட மீனவர் பிரமித்துப்போனார். ஊர் மக்களும் அங்கு திரண்டு வந்து அம்மனை வணங்கினர். இதையறிந்த அரசன் புற்றை இடிக்க உத்தரவிட்டார். பணியாளர்கள் இடித்த பின்னர் ஒரு பிடிமண்ணை மீனவர் எடுத்து வைக்க அது மிகப்பெரிய புற்றாக மாறியது. இதனால் கோபம் கொண்ட அரசன் மீனவரை கொன்று விடுங்கள் என்று உத்தரவிட அந்த நொடியே அரசனின் கை முடங்கிப்போனது.
இதனால் தன் தவற்றை உணர்ந்த அரசன் அங்காள பரமேஸ்வரி என்னை மன்னித்து விடு என்று மன்னிப்பு கேட்டு, அந்த நந்தவனத்தையே அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினான். அம்மனுக்கு உதவியாக இருந்த மீனவ சமுதாயம்தான் இன்றுவரை அந்த கோயிலில் சேவை செய்கிறார்கள்.அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் திரளுவார்கள். ஆலயம் முழுவதும் நிரம்பி வெளியிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். கருவறையில் உள்ள புற்றையே பக்தர்கள் வழிபட்டுச்செல்கிறார்கள். வருடாந்திர உற்சவத்தின்போது கிராம மக்கள் புதிய தேரில் அம்மனை அமரவைத்து ஊர்வலமாக எடுத்துச்செல்கிறார்கள். பவுர்ணமி தினங்களில் அம்மனை தரிசிக்க 24 மணிநேரமும் ஆலயம் திறந்திருப்பது சிறப்பு.
பல கிராமங்களில் இருந்து வரும் பக்தர்கள் அங்கு வந்து பொங்கலிட்டு அம்மனுக்கு படையல் போடுகின்றனர். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அங்காள பரமேஸ்வரிக்கு நடைபெறும் வருடாந்திர திருவிழாவின் போது மயானக் கொள்ளை என்ற பெயரில் பெரிய விழாவே நடக்கும் போது பக்தர்கள் பலவகை தானியங்களை கொண்டு வந்து உணவு சமைத்து அம்மனுக்கு அர்ப்பணிக்கின்றார்கள். அங்காளம்மன் இத்தலத்தில் மகா மண்டபத்தில் புற்றாகவும், மூலஸ்தானத்தில் உருவப்படத்துடனும் காட்சி அளிக்கிறாள். அருகில் சிவபெருமானும் வீற்றிருக்க பக்தர்கள் இப்புற்று மண்ணை பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர். பக்தர்கள் கபால வேடமிட்டும், வேப்பஞ்சேலை அணிந்து வந்தும் பிரார்த்தனையை செலுத்துகின்றனர். இத்திருக்கோயிலின் தல விருட்சம் வில்வ மரம்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று அங்காள பரமேஸ்வரிக்கு ஊஞ்சல் விழா நடத்தப்படுகிறது. இதனைக் காண விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பெங்களூர் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சோப லட்சம் பக்தர்கள் குவிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாசி மாதம் சிவபெருமான் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு வந்து இரவு தங்கியதால் அன்றைய இரவை சிவன்ராத்திரி என்றும், அன்று இரவில் கரகம் என்ற சக்தி கரக திருவிழாவாகவும் மறுநாள் பூரண அமாவாசை தினத்தில் அங்காளி ஆவிகளுக்கும் ஆன்மாக்களுக்கும் சூறையாடும் நிகழ்ச்சியை ‘மயானக் கொள்ளை‘ என்று அழைக்கப்படுகிறது.
மாசி திருவிழா நடைபெறும் 10 நாட்களும் அம்மனின் வரலாற்றுத்திருவிழா என அழைக்கப்படுகிறது. 5ம் நாள் பகல் உற்சவமாக தீமதி திருவிழா கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் பொன், வெள்ளி, பணம் போன்றவற்றை காணிக்கைகளாக செலுத்துகின்றனர். சென்னையில் இருந்து மேல்மலையனூருக்கு பேருந்து வசதி உள்ளது. செஞ்சியில் இருந்து 21 கி,.மீ தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து 60 கி.மீ தொலைவிலும் இந்த ஊர் உள்ளது. அம்மனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்
*அங்காளம்மனை மூன்று முறை தரிசித்தால் இச்சா சக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற முப்பெரும் சக்திகளும் உடலில் நிறைந்து நன்மை பயக்கும். *பில்லி, சூனியம், வைப்பு, ஏவல், காட்டேரி, சேட்டைகள் எது பிடித்தவராயினும் அவர்களை அழைத்துவந்து அம்மன் புற்றை மூன்று முறை சுற்றி வந்து பிறகு மயானத்திற்கு அழைத்துச் சென்று இரவு 12 மணிக்கு எலுமிச்சம்பழம், துமட்டிக்காய், ஊமத்தங்காய், கல்யாண பூசணிக்காய், தேங்காய் போன்ற வகைகளில் மூன்று முறை தலையைச் சுற்றி உடைத்தல், அழித்தல் செய்தால் அவர்களை பிடித்துள்ள வினைகள் யாவும் அம்மன் பேரருளால் அழிந்து நன்மை ஏற்படுகிறது. * மேல்மலையனூர் கோயிலுக்கு வருபவர்கள் குறைந்தது மூன்று வித தான தருமங்கள் செய்வது நல்லது.