கீவ்: உக்ரைன் தீவிரவாதிகளின் ஏவுகணை தாக்குதலில் வெடித்து சிதறிய மலேசிய விமானத்தில் பயணம் செய்த 298 பேர் பலியாயினர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ரஷ்யாவுக்கு அருகில் உள்ள உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள், தீவிரவாதிகளாக மாறி அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்நிலையில், நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து நேற்று கோலாலம்பூர் நோக்கி மலேசியாவுக்கு சொந்தமான மலேசியன் ஏர்லைன்ஸ் போயிங் விமானம் புறப்பட்டு சென்றது.
உக்ரைனில் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள ஹிராபோவ் என்ற கிராமத்தின் மீது இரவு 7.45 மணியளவில் விமானம் பறந்த போது திடீரென வெடித்து சிதறியது. உக்ரைன் கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை தாக்குதலில்தான் இந்த விமானம் வெடித்து சிதறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்தில் பயணம் செய்த நெதர்லாந்தை சேர்ந்த 154 பேர் உள்பட 298 பேரும் பலியாயினர். இதுகுறித்து மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் ஹியூப் கோர்டர் கூறுகையில், விமானம் தாக்கப்படுவதற்கு முன்பாக அவசர அழைப்புகள் எதுவும் விமானத்தில் இருந்து வரவில்லை.
விமானத்தில் 154 நெதர்லாந்து பயணிகளும், 27 ஆஸ்திரேலிய பயணிகளும், 23 மலேசிய பயணிகளும், இந்தோனேஷியாவைச் சேர்ந்த 11 பேர், இங்கிலாந்து பயணிகள் 6 பேர், ஜெர்மன் பயணிகள் 4 பேர் உள்பட 283 பயணிகளும், 15 ஊழியர்களும் உள்பட 298 பேர் இருந்தனர் என்றார். ஹிரபோவ் கிராமத்தில் விமான பாகங்கள் சிதறி தீப்பிடித்து எரிந்தன. பயணிகளின் உடல்கள் கருகி கிடந்தன. மீட்பு பணிகளை நடத்துவதற்கு உதவியாக 3 நாட்கள் போர் நிறுத்த அறிவிப்பை கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கூறுகையில், ‘இந்த தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.
உலக தலைவர்கள் கண்டனம்: ரஷ்ய அதிபர் புடினை அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மலேசிய விமானம் நொறுங்கியது மிகவும் கவலையளிக்கும் சம்பவம் என்றும், இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் புடின் ஒபாமாவிடம் கூறினார். மேலும், புடின் விடுத்துள்ள அறிக்கையில், ‘உக்ரைன் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே, விமான தாக்குதல் சம்பவத்திற்கு உக்ரைன்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்’ என்றார்.உக்ரைன் விவகாரம் தொடர்பாக அவசர கூட்டம் ஒன்றை கூட்டவும், ஐநாவுக்கு இங்கிலாந்து அழைப்பு விடுத்துள்ளது. சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோத் கூறுகையில், ‘ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படையினர் ரஷ்ய தயாரிப்பான தரையில் இருந்து விமானத்தை துரத்தி சென்று தாக்கும் பக் ரக ஏவுகணையை கொண்டு தாக்கியுள்ளனர். இதற்கு கிளர்ச்சியாளர்கள்தான் பொறுப்பு. இந்த தாக்குதல் கண்டனத்திற்குரியது. சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்’ என்றார். அதே போல், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்கெலும் கவலை தெரிவித்துள்ளார்.நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நெதர்லாந்து தலைமையில் புரூசெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.
விமான தாக்குதலில் 154 பேர் இறந்து போன தகவல் அறிந்து உடனடியாக அவர் நாடு திரும்பியுள்ளார். உக்ரைன் அதிபர் பெட்ரோ போராஷென்கோ கூறுகையில், ‘ராணுவத்தினர் இந்த தாக்குதலை நடத்தவில்லை. தீவிரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்தான். தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் கைகோர்க்க வேண்டும். விமானத்தை தீவிரவாதிகள் தாக்கியது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றார்.தாக்குதலில் உயிரிழந்த வர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, இரங்கல் தெரிவித்துள்ளார்.