லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று மாலை துவங்குகிறது. நாட்டிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்பு இந்த டெஸ்ட் போட்டியிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை தள்ளிவிட்டதுடன், அவரைத் திட்டியதாக இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்தியா புகார் அளித்துள்ளது. இதே போன்று சிறிய பிரச்னையை பெரிதாக்கிவிட்டதாக ரவீந்திர ஜடேஜா மீது இங்கிலாந்தும் புகார் செய்துள்ளது. இதனால், இரு அணி வீரர்களிடையே கசப்புணர்வு அதிகரித்துள்ளது.
வழக்கமாக 3 வேகப் பந்து வீச்சாளர்கள், 1 சுழல் பந்து வீச்சாளருடன் இந்திய அணி களமிறங்குவது வழக்கம். ஆனால், 4 பந்து வீச்சாளர்களால், இங்கிலாந்தில் உள்ள விக்கெட்டுகளில் விரைவாக எதிரணி பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடிவதில்லை. இதனால், பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டு வர டோனி முடிவு செய்துள்ளார். நாட்டிங்ஹாம் டெஸ்ட்டில் 5 பந்து வீச்சாளர்களுடன் விளையாடிய இந்திய அணி, இன்றைய போட்டியிலும் 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 1 சுழல்பந்து வீச்சாளர், ஒரு ஆல் ரவுண்டரை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 2007-08ம் ஆண்டு அடிலெய்டு டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் இப்போதுதான் வெளிநாட்டு டெஸ்ட் தொடர் ஒன்றில் 5வது பந்து வீச்சாளர் களமிறக்கப்பட்டு வருகிறார். இன்றைய போட்டியில் 5வது பந்து வீச்சாளராக ஸ்டுவர்ட் பின்னி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘‘இந்திய அணியில் வேகப்பந்து வீசும் ஆல் ரவுண்டர் இல்லை என்ற குறை குறித்து நாங்கள் ஏற்கனவே பலமுறை விவாதித்துள்ளோம். இதனால்தான், நாங்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 1 சுழல்பந்து வீச்சாளருடன் களமிறங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பந்து சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லாமல் போனால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கிறது. அவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியுள்ளது. நான்கு பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய டெஸ்ட் போட்டிகளைப் பார்த்தோமென்றால், வேகப்பந்து வீச்சாளர்கள் முழு முயற்சி எடுத்து பந்து வீசியுள்ளனர்’’ என்று முதல் டெஸ்ட் துவக்கத்துக்கு முன்னர் இந்திய கேப்டன் டோனி கூறியிருந்தார். தென்னாப்பிரிக்க வீரர் காலிஸ் போன்ற ஆல்ரவுண்டராக பின்னி இருக்க மாட்டார் என்பதை டோனி உணர்ந்திருந்தாலும் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக பின்னியைப் பயன்படுத்த முடியும் என்பதால் அவருக்கு இன்றைய போட்டியிலும் வாய்ப்பளிக்க டோனி முடிவு செய்துள்ளார்.
தடுமாற்றத்துக்கு தீர்வுஇர்பான் பதானுக்கு பின்னர் இந்திய அணியில் பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீசும் திறன் படைத்த ஆல் ரவுண்டர்கள் இல்லை. காயம் காரணமாகவும், சமீப காலங்களில் சிறப்பாக விளையாடாததாலும் இர்பான் பதானால் இந்திய அணியிடம் இடம் பிடிக்க முடியாமல் போன நிலையில், கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் இன்றி இந்திய அணி தடுமாறி வந்தது. இந்நிலையில், இந்திய அணிக்கு கிடைத்த வேகப்பந்து வீசும் ஆல் ரவுண்டராக பின்னி திகழ்கிறார். அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா?இந்திய ஆப் ஸ்பின்னர் அஸ்வினுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் இடம் அளிக்கப்படவில்லை. இங்கிலாந்து ஆடுகளங்களில் இடது கை சுழல்பந்து வீச்சாளரால் சிறப்பாக பந்து வீச முடியும் என்று கணக்கிட்டு, ரவீந்திர ஜடேஜா நாட்டிங்ஹாம் டெஸ்ட்டில் சேர்க்கப்பட்டார். ஆனால், முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஜடேஜா இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகத்துக்கு உரியதாகி உள்ளது. இதனால், ஜடேஜாவுக்கு பதில் அஸ்வின் களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது.