சென்னை: ஆடம்பர வாழ்க்கை வாழ பூட்டிய வீடுகளில் தனி ஆளாக நின்று கொள்ளையடித்த பலே இன்ஜினியரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை போலீஸ் காவலில் எடுத்தால் இன்னும் பல உண்மைகள் வெளியாகும் என்பதால் அவரை போலீசார் காவலில் எடுக்க உள்ளனர். பாடி டிவிஎஸ் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் பிரதீஷ் புவன் (28). இன்ஜினியரிங் முடித்து சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். இவர் வளசரவாக்கம், ராயலா நகர், தி.நகர், கோயம்பேடு, நந்தம்பாக்கம், கொரட்டூர், படூர், கேளம்பாக்கம், காட்டாங்கொளத்தூர், மதுரவாயல், போரூர் என 18 இடங்களில் பூட்டிய வீடுகளை குறி வைத்து தன்னந்தனியாக பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை பணத்தை கொள்ளையடித்துள்ளார்.
மேலும், கல்லூரி மாணவர்களின் விடுதிக்குள் நுழைந்து லேப்டாப்புகளையும் அபேஸ் செய்துள்ளார். நகை அனைத்தையும் பாடி, வடபழனி, முகப்பேரில் உள்ள அடகு கடையில் விற்று பணத்தை அள்ளி உள்ளார். அந்த பணத்தில் தனது திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி முடித்து உள்ளார். மேலும், தனது தந்தைக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். கொள்ளையடித்த பணத்தில் தொழில் அதிபராக வலம் வந்துள்ளார். அவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ தங்கம், 21 லேப்டாப், ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.முழுமையான விசாரணை நடத்த பிரதீஷ் புவனை போலீஸ் காவலில் எடுக்கும் முடிவுக்கு போலீசார் வந்து விட்டனர். எனவே, ஒரு சில நாட்களில் பிரதீஷ் புவன் போலீஸ் காவலில் எடுக்கப்படுகிறார். இதில், இன்னும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகலாம்.