கிண்டல் செய்த வாலிபர் மீது போலீஸ் கமிஷனர் ஆபீசில் 10ம் வகுப்பு மாணவி புகார்
சென்னை: கிண்டல் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 10ம் வகுப்பு மாணவி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் லதா (15). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது:எனது தந்தை காலமாகி விட்டார். உருது பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறேன். என்னை எங்கள் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நான் பள்ளிக்கு செல்லும் போதும், திரும்பி வரும்போதும் கேலியும், கிண்டலும் செய்து வருகிறார்.
இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் எனது தாயார் புகார் அளித்தார். ஆனால், புகார் அளிக்க சென்ற என் அம்மாவை போலீசார் காவல் நிலையத்தில் இருக்க வைத்து விட்டனர். அவருடன் சென்ற எனது உறவினரை லாக்கப்பில் அரை நிர்வாணமாக வைத்து விட்டனர். போலீசார் என்னை கிண்டல் செய்யும் வாலிபரிடம் பணம் பெற்றுக் கொண்டு அவருக்கு சாதகமாக செயல்படுகின்றனர். எனவே, வாலிபர் மீதும், போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.