முதல்முறையாக காதல் கதை இயக்கும் விஜய்
சென்னை: காதல் கதையை முதன்முறையாக இயக்குகிறேன் என்றார் விஜய்.தொடக்கமே காதல் கதை என்றுதான் பெரும்பாலான இயக்குனர்கள் திரையுலகில் குதிக்கின்றனர். தெய்வத்திருமகள், தலைவா, சைவம் போன்ற படங்களை இயக்கிய விஜய் இதுவரை காதல் கதை இயக்கியதில்லை. இதுபற்றி அவர் கூறியதாவது:‘தலைவா படம் மும்பை தாதா கதையாகவும், ‘தெய்வத்திருமகள்‘ தந்தை மகளுக்கு இடையேயான பாசத்தை மையமாக வைத்தும், ‘சைவம் தாத்தாவுக்கும் பேத்திக்கும் இடையிலான பாசத்தை மையமாக வைத்தும் கதைகள் அமைத்திருந்தேன். ஆனால் இதுவரை முழுக்க முழுக்க ஒரு காதல் கதையை இயக்கியதில்லை.
இப்படி சொல்வது ஆச்சர்யமாக இருக்கலாம். நிஜம் அதுதான். அடுத்து நான் இயக்கும் படம் முழுக்க முழுக்க காதல் கதைதான். இதில் விக்ரம் பிரபு ஹீரோ. வித்தியாசமான படங்களை இயக்கி பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறேன். இம்முறை காதல் கதையில் அந்த பரிசோதனையை மேற்கொள்கிறேன். சைவம் படத்துக்கு பிறகு எனது பொறுப்பு அதிகரித்திருக்கிறது. ஒரு பெண்ணுடன் ஹீரோ காதல் கொள்கிறார். அதனால் வரும் விளைவுகள்தான் இக்கதை. இதில் நடிக்கும் ஹீரோயின் தேர்வு மற்ற நட்சத்திர தேர்வு நடந்து வருகிறது. சென்னையில இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு நடக்க உள்ளது.இவ்வாறு விஜய் கூறினார்.