திருச்சி: பிச்சை எடுத்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட மோதலில் பெண் கல்லால் அடித்து கொல்லப்பட்டார். திருச்சி ஜங்ஷன் ரயில்நிலைய பின்புறம் உள்ளது கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருவர். சனிக்கிழமைகளில் அதிக அளவில் கூட்டம் இருக்கும்.பக்தர்களிடம் பிச்சை எடுப்பதற்காக இந்த கோயில் அருகே எப்போதும் பிச்சைக்காரர்கள் அதிகளவில் இருப்பர். இவர்கள் இரவு நேரங்களில் அந்த பகுதியில் உள்ள பாழடைந்த குடியிருப்புகளில் தங்கி கொள்வர். நேற்று இரவு பஞ்சவர்ணம்(40), அவரது கணவர் செல்வகுமார், வேளாங்கண்ணி, சரவணன் உள்பட பலர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் பணத்தை பிரித்துக்கொண்டிருந்தபோது வேளாங்கண்ணி, சரவணன் கோஷ்டி தங்களுக்கு அதிக பணம் வேண்டும் என கேட்டனர். இதற்கு செல்வகுமார், பஞ்சவர்ணம் தம்பதி சம்மதிக்கவில்லை.
இதனால் அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.செல்வகுமாரை வேளாங்கண்ணியும், சரவணனும் தாக்கினர். ஏற்கனவே அவர் கால் சரிவர நடக்க முடியாமல் பாதிக்கப்பட்டவர். அடி தாங்கமுடியாமல் அவர் அருகில் உள்ள ஒரு புதருக்குள் போய் மறைந்து கொண்டார். ஆனால் பஞ்சவர்ணம் (இடது கை இல்லாதவர்) எதிர்த்து போராடினார். எனவே அவரது முகத்தில் கல்லால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த பஞ்சவர்ணம் அதே இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். சரவணனும், வேளாங்கண்ணியும் அங்கிருந்து ஓடிவிட்டனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது செல்வகுமார், நடந்த சம்பவங்கள் குறித்து போலீசாரிடம் தெரிவித்தார்.இதற்கிடையே ரயில் நிலையம் அருகே சுற்றிக்கொண்டிருந்த வேளாங்கண்ணி கைது செய்யப்பட்டார். தலைமறைவான சரவணனை போலீசார் தேடி வருகிறார்கள். கோயில் அருகே கொலை நடந்ததை அறிந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.