தாராபுரம்: தாராபுரத்தில் அதிமுக கோஷ்டி பூசல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நகரமன்ற துணைத்தலைவரின் அறை திடீரென பூட்டி சீல்வைக்கப்பட்டது. இதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த கலாவதி, துணைத்தலைவராக கோவிந்தராஜ் உள்ளனர். இருவரும் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர். 20 அதிமுக கவுன்சிலர்களில் தலைவர் கோஷ்டியில் 8 பேரும், துணைத் தலைவர் கோஷ்டியில் 12 பேரும் உள்ளனர். நகராட்சி கடைகள் அனைத்தையும் மறு ஏலம் கொண்டுவரும் விசயத்தில், தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் மோதல் ஏற்பட்டது. தலைவர் நகராட்சி நிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்து, கடைகளை மறு ஏலம் நடத்துவதற்கான தீர்மானத்தை கொண்டுவந்தார். துணைத் தலைவர் கோஷ்டியினர், கடைக்காரர்களுக்கு ஆதரவாக இருந்து தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு பல்வேறு பிரச்னைகளை கடந்து, நகராட்சி கடைகளை ஏலம் நடத்தி முடிக்கப்பட்டது.
இதற்கிடையில், நகராட்சி கடைகளை ஏலம் எடுத்தவர்களுக்கு இதுவரையில் கடைகளை ஒப்படைக்கவில்லை. பழைய ஒப்பந்ததாரர்கள் கடையை நகராட்சி வசம் ஒப்படைக்காமல் தாங்களே நடத்தி வந்ததால், காலி செய்யாத கடைகள் அதிரடியாக பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் துணைத் தலைவர் கோவிந்தராஜ் ஆணையரிடம் ரகளையில் ஈடுபட்டதாக, ஆணையர் போலீசில் புகார் அளித்தார். மறு நாள் சீல் வைக்கப்பட்ட கடைகள் அனைத்தும், சட்டத்திற்கு புறம்பாக சீல் உடைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டன. துணைத் தலைவர் கோஷ்டியினரின் துண்டுதல் தான் இதற்கு காரணம் என எதிர்தரப்பினர் கூறினர். அதைத் தொடர்ந்து தலைவர் கோஷ்டியைச் சேர்ந்த கவுன்சிலர்கள், துணைத் தலைவருக்கு தனியறை வழங்கக் கூடாது. தற்போதுள்ள அவரது அறை தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என ஆணையரிடம் மனு கொடுத்தனர்.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம் துணைத் தலைவர் அறையை பூட்டி சீல் வைத்தது. மேலும் அறைக்கு முன்பு `இந்த அறை துணைத் தலைவருக்கான அறை அல்ல‘ என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தகவல் அறிந்த துணைத் தலைவரின் ஆதரவாளர்கள், துணைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி அலுவலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்டனர். அறைக்கு சீல் வைத்ததற்கான காரணத்தை நகராட்சி ஆணையர் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். நகரமன்ற துணைத் தலைவரின் அறைக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. இதுபற்றி ஆணையர் நாராயணன் கூறுகையில், துணைத்தலைவருக்கென்று எந்த நகராட்சியிலும் தனி அறை கிடையாது. காலியாக இருந்த ஒரு அறையை ‘துணைத்தலைவர் அறை‘ என போர்டு மாட்டி கோவிந்தராஜ் பயன்படுத்தி வந்தார். இதுபற்றி புகார் வந்ததால் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது என்றார்.