முதல் டெஸ்ட் போட்டி : இங்கிலாந்துக்கு நெருக்கடி தருமா இந்தியா?
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் நகரில் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று துவங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 294 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 122 ரன்களை எடுத்திருந்தார். கேப்டன் டோனி 50 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். முரளி விஜய் நேற்று அடித்த சதம் அவரது நான்காவது டெஸ்ட் சதம். வெளிநாட்டில் அடிக்கப்பட்ட அவரது முதல் சதம் இதுதான். கடந்த ஆண்டு டர்பனில் 97 ரன்கள் அடித்ததுதான் இதுவரை அவர் வெளிநாட்டில் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது.
1980ம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்கும் 6வது துவக்க பேட்ஸ்மேன் முரளி விஜய். சதம் அடித்த மற்றவர்கள் ரவி சாஸ்திரி, வீரேந்திர சேவாக், ராகுல் திராவிட்(தலா 2 முறை).நேற்று வீசப்பட்ட 540 பந்துகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் 165 பந்துகளை தொடாமல் விட்டுவிட்டனர். இந்த 165 பந்துகளில் முரளி விஜய் மட்டும் 103 பந்துகளை அடிக்காமல் தவிர்த்தார்.ஷிகர் தவனை ஜேம்ஸ் ஆண்டர்சன் அவுட்டாக்கினார். டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இது அவரது 50வது விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைதானத்தில் 8 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார் ஆண்டர்சன். இன்று நடைபெறும் இரண்டாம் நாள் ஆட்டத்திலும் முரளி விஜய் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் 500 ரன்களுக்கு மேல் எடுத்து இங்கிலாந்து க்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்கிறனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.