திரிபோலி:சிரியா மற்றும் ஈராக்கை கலக்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் லிபியாவிலும் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஏமன் உள்ளிட்ட நாடுகளில் பின்லேடன் தலைமையிலான அல்கய்தா அமைப்பு கடந்த சில வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அதன் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட பிறகு அந்த அமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதற்கிடையே, சிரியாவில் இஸ்லாமிய அரசை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் அல்கய்தாவின் ஒரு பிரிவினர் ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பை தொடங்கி போராட்டம் நடத்த தொடங்கினர். பின்னர் இவர்கள், முஸ்லிம்களில் சன்னி பிரிவு ஆதரவுடன் சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியதுடன், சுதந்திர இஸ்லாம் தேசம் ஒன்றை நிறுவியுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர்.
ஈராக்கில் தொடர்ந்து சண்டையிட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பாக்தாத் நகரத்தை கைப்பற்றும் எண்ணத்துடன் ஈராக் ராணுவத்துடன் மோதி வருகின்றனர். இதற்கிடையில் சிரியா, ஈராக்கை தொடர்ந்து தற்போது லிபியாவிலும் தங்களது தீவிரவாத அமைப்பின் கிளையை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளனர் என சர்வதேச புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து லிபியாவில் உள்ள நாளேடுகளிலும் செய்திகள் வெளியாகின. எகிப்து, துனிஷியா, அல்ஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், லிபிய தீவிரவாதிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருடன் இணைந்து கிளை அலுவலகம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. லிபியாவின் முன்னாள் அதிபர் மம்மர் கடாபி ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு நிலவி வரும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை பயன்படுத்திக் கொண்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் லிபியாவையும் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.