மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் தாலுகா கடலங்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன் இங்கு படிக்கும் 8ம் வகுப்பு மாணவி ஒருவர், மதிய உணவு இடைவேளையின்போது, தலைமுடியை விரித்துப்போட்டு கையை முறுக்கிக் கொண்டு சத்தம் போட்டபடி ஆடியுள்ளார். இதை கண்ட சக மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அங்கு படிக்கும் மாணவன் ஒருவர்(இவருக்கு மதுரை வீரன் சாமி வருமாம், இதேபோல் ஊரில் பலருக்கு இந்த மாணவன் தான் வேப்பிலை அடித்து பேய் ஓட்டுவாராம்), வேப்ப மரத்திலிருந்து வேப்பிலை பிடுங்கி வந்து அந்த மாணவியின் தலையில் அடித்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த மாணவி மீண்டும் சகஜநிலைக்கு திரும்பியுள்ளார். உடனடியாக அந்த மாணவியை ஆசிரியர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின் அடிக்கடி பல மாணவிகள் இதேபோல் ஆடி வருவதும், அவர்களை வேப்பிலை அடித்து ஆசுவாசப்படுத்துவதுமாக உள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோர் சிலர் கூறியதாவது: இதே பகுதியில் வசித்த 3 பெண்கள் திடீரென இறந்துவிட்டனர். அவர்களது ஆவிதான் இங்கு சுற்றுகிறது. இந்த பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் 2ம், பாத்ரூமில் 1ம் என 3 ஆவிகள் தான் இந்த சேட்டையை செய்கின்றன.இதனால் நாங்கள் மாணவிகள் யாருக்கும் மல்லிகை பூ வைத்து அனுப்ப மாட்டோம். அதையும் மீறி யாராவது வைத்து இருந்தால், நாங்களே பிடுங்கி எறிந்துவிடுவோம். மாணவிகள் மட்டும் தான் இதுபோல் ஆடுகின்றனர். மாணவர்களுக்கு யாருக்கும் வந்ததில்லை என்றனர்.இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் ஆசிரியர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால் பல மாணவிகளின் பெற்றோர், தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்க்க டி.சி கேட்டு வருகின்றனர்.
ஆசிரியரை ‘டா’ போட்ட மாணவிகடந்த 2 நாட்களுக்கு முன் 7ம் வகுப்பில் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் ஆங்கிலப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு மாணவி தலையை விரித்துப்போட்டு, ‘டேய் நான் யாருன்னு தெரியுமா உங்களுக்கு?‘ என்று கேட்டதுடன், பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரை பார்த்து, ‘டேய் நீ எதுக்குடா இங்க வந்தே‘ என அதட்டினார். அப்போது அந்த ஆசிரியர் குச்சியை எடுத்து அந்த மாணவியை அடிக்கப்போகவே, அந்த மாணவி, ‘நீ என்னைய அடிச்சுருவியா? அடிச்சு பாரு பாக்கலாம். என்னைய அடிச்சீன்னா சும்மா விட மாட்டேன்‘ என பதிலுக்கு சத்தம்போடவே, அந்த ஆசிரியர் கப்சிப் ஆனார். பின்னர் வழக்கம்போல் ஒரு மாணவன் வேப்பிலையுடன் வந்து, அந்த மாணவியை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்.