மாணவர்கள் எதிரிலேயே கத்தியால் குத்தி ஆசிரியை கொலை பிரான்சில் பரபரப்பு
ஆல்பி:பிரான்ஸ் நாட்டுக்கு தெற்கே ஆல்பி நகரில் எடோயுவார்ட் ஹெராய்ட் என்ற ஆரம்பப் பள்ளி உள்ளது. இங்கு 3 முதல் 11 வயது வரையுள்ள 284 குழந்தைகள் படிக்கின்றனர்.இப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருத்தி கடந்த ஒன்றரை மாதமாக பள்ளிக்கு சரியாக வருவதில்லை. அதனால் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு ஆசிரியை பேபியன் டெர்ரல் கால்ம்ஸ் மாணவியிடம் கூறினார். நேற்று காலை 9 மணிக்கு பள்ளிக்கு தாயாரை மாணவி அழைத்து வந்தாள்.
அங்கு ஆசிரியைக்கும் மாணவியின் தாய்க்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மாணவியின் தாயார் திடீரென தன் கைப்பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து, பேபியனை மாணவர்கள் கண் எதிரிலேயே சரமாரியாக குத்தினார். இதில் பேபியன் சம்பவ இடத்திலேயே பலியானார்.இதனையடுத்து மாணவியின் தாயார் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர், அவரது வீட்டில் வைத்து ஆல்பி போலீசார் மாணவியின் தாயாரை கைது செய்தனர். அந்தப் பெண் மனநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.