லண்டன்:சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் 1 லட்சம் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ராணுவம் அவர்களை ஒடுக்கி வருகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், விரைவில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. எனினும், உள்நாட்டு போர் மேலும் வலுத்து வருகிறது. இதற்கிடையே, சிரியாவின் உதவியுடன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அண்டை நாடான ஈராக்கை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமார் 500 கோடி டாலர் மதிப்பில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் அளித்து பயிற்சி அளிப்பது தொடர்பாக நாடாளுமன்ற அனுமதியை அமெரிக்க அதிபர் ஒபாமா கோரி இருந்தார்.இந்நிலையில், சிரியாவில் அதிபருக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்க இங்கிலாந்தும் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து ராணுவ தலைவர் டேவிட் ரிச்சர்ட்ஸ் அளித்த ஆலோசனையின்படி சுமார் 1 லட்சம் சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி வழங்குவது தொடர்பாக இங்கிலாந்து அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தகவலை உறுதிபடுத்த இங்கிலாந்து ராணுவ அமைச்சக அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.