ஜெர்மனிக்கு எதி ரான ஆட்டத்தின் போது அல்ஜீரிய அணி தோல்வியை தழுவியபோதும், உலகம் முழுவதும் உள்ள பாலஸ்தீனியர்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ளது. உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியா, முதல் முறையாக நாக் அவுட் சுற்றுவரை முன்னேறி வந்தது. ஆனால் நாக் அவுட் சுற்றில் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை எதிர்கொண்ட அல்ஜீரியா கடைசி வரை போராடி தான் தோல்வியை தழுவியது. காலிறுதிக்கு தகுதி பெறவில்லை என்ற போதிலும் தாய்நாடு திரும்பிய அல்ஜீரிய வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் அப்துல்மாலிக் செலாய் உட்பட லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த வரவேற்பில் பங்கேற்றனர். உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்று நாக் அவுட் சுற்று வரை விளையாடியதன் மூலம் அல்ஜீரிய அணிக்கு 9 மில்லியன் டாலர் பரிசு தொகை கிடைத்துள்ளது.
இந்த பரிசு தொகையை அந்த அணி வீரர்கள் பங்கிட்டு கொள்ளலாம் என்ற போதிலும் அதை ஒரு நல்ல காரியத்திற்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். தங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் இதை வெளிப்படையாகவே அறிவித்தார் அல்ஜீரியாவின் நட்சத்திர வீரர் இஸ்லாம் ஷில்மானி. ‘‘பரிசு தொகையை நாங்கள் பெற்று பலனடைவதை காட்டிலும், அதை காஜா பகுதி மக்களு க்கே வழங்குகிறோம். ஏனெனில் எங்களை காட்டிலும் அவர்களுக்கு தான் அந்த பரிசு தொகை மிக பயனுள்ளதாக இருக்கும்,’’ என உருக்கத்துடன் தெரிவித்தார்.பாலஸ்தீன மக்களுக்கு எதிராக தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 1ம் தேதி இஸ்ரேலியர்கள் 3 பேர் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக காஜா மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர். ஆரம்பம் முதல் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நாடு அல்ஜீரியா. இந்த வரிசையில் தற்போது அந்நாட்டின் கால்பந்து வீரர்களும் உலக கோப்பை மூலம் கிடைத்த பணத்தை காஜா மக்களுக்கு வழங்க முன்வந்திருப்பது மூலம் பாலஸ்தீனியர்களின் இதயங்களை வென்றுள்ளனர்.