தாயின் கண்ணெதிரே பரிதாபம் பஸ் சக்கரம் ஏறியதில் சிறுவன் நசுங்கி பலி
தாம்பரம்: பல்லாவரம் அருகே பஸ் உரசியதில் கீழே விழுந்த சிறுவன் மீது சக்கரம் ஏறியது. இதில் உடல் நசுங்கிய சிறுவன் பரிதாபமாக இறந்தான். பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஜெ.ஜெ. நகர் புத்தர் தெருவை சேர்ந்தவர் அப்துல் காதர். அப்பகுதியில் உள்ள செருப்புக் கடையில் வேலை செய்கிறார். இவரது மனைவி தமினாபேகம். இவர்களுக்கு அப்துல் ரகுமான் (10), அப்துல் ஆரீப் (5) என்ற மகன்கள் உள்ளனர். அப்துல் ரகுமான் பல்லாவரம் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறான். அப்துல்ஆரீப் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவன். இன்று காலை யில் அப்துல் காதர் வேலைக்கு சென்று விட்டார். தமினாபேகம், மகன் அப்துல் ரகுமானை பள்ளிக்கு அனுப்ப பஸ் நிலையம் அழைத்து சென்றார். அப்துல் ஆரீபை இடுப்பில் வைத்து இருந்தார். பஸ் வந்ததும் காத்திருந்தவர்கள் முண்டியடித்து ஏறினர். அப்துல் ரகுமானை தமினாபேகம் பஸ்சில் ஏற்றினார். பஸ் நகர்ந்தபோது அப்துல் ஆரீப் மீது உரசியது. அவன் கீழே விழுந்தான். அவன் மீது சக்கரம் ஏறியது. தமினாபேகம் அலறினார். உடனே சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து பார்த்து, சிறுவன் இறந்து விட்டதாக கூறினார். தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ரவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.