சென்னையில் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வடசென்னையில் ஓடும் பஸ்சில் மாணவர்கள் அரிவாள், கத்தி சகிதம் மோதிக் கொண்டனர். அப்போது சில பயணிகளும் பலத்த காயமடைந்தனர். Êஅதன்பின், வன்முறைகளில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்ததால் மோதல்கள் குறைந்திருந்தன. தற்போது மீண்டும் மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதுவது துவங்கி இருக்கிறது. கடந்த வாரம் ஓட்டேரி அருகே பஸ்சில் சென்று கொண்டிருந்த ஒரு கல்லூரியின் மாணவர்களை இன்னொரு கல்லூரி மாணவர்கள் உருட்டுக்கட்டைகளால் தாக்கினர். இதில் சில மாணவர்களும், பயணிகளும் காயமடைந்தனர்.
இதே போல், நேற்று முன் தினம் சென்னை அம்பேத்கர் கலை கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் பயிலும் மாணவர் அஜித்குமார் என்பவருக்கும், பிஎஸ்சி வேதியியல் பயிலும் மாணவர் அரவிந்த்குமார் என்ற மாணவருக்கும் வகுப்பறையில் சாதாரணமாக சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, அரவிந்த்குமார், கல்லூரியில் இருந்து வெளியே சென்று விட்டு, சிறிது நேரம் கழித்து வந்திருக்கிறார். அப்போது அவர் கத்தி எடுத்து வந்துள்ளார். அதைக் கொண்டு அஜித்குமாரை மார்பு, தலை என சரமாரியாக வெட்டி விட்டு ஓடினார். இதன்பின், அரவிந்த்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த 2008ம் ஆண்டில் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது சட்டக்கல்லூரியே போர்க்களம் போல் ஆனது. அங்கு நடந்த வன்முறை சம்பவங்களை தொலைக்காட்சியில் பார்த்த பல பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்பவே பயந்தனர். மேலும், அந்த கலவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது ஐகோர்ட் நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த நீதிபதி கமிஷன், கலவரத்திற்கான காரணங்கள் குறித்த அறிக்கை அளித்ததுடன், மாணவர்களிடையே மோதலை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சட்டக் கல்லூரியை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் அரசுக்கு அளித்தது.
தற்போது மீண்டும் அதே போன்று கல்லூரிகளில் வன்முறை வெடிக்காமல் தடுத்து, மாணவர்கள் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசாரும், உயர்கல்வித் துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கல்லூரி மாணவர்களின் வன்முறை கலாசாரத்தை ஆரம்ப நிலையிலேயே ஒடுக்க வேண்டும். மாணவர்களுக்கு கவுன்சலிங் அளிப்பது, அவர்களின் கவனம் ஆக்கப்பூர்வ வழிகளில் திரும்புவதற்கான நடவடிக்கை எடுப்பது போன்றவை குறித்து கல்லூரி நிர்வாகங்களும் சிந்திக்க வேண்டும்.