சென்னை மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடி அடுக்குமாடி கட்டிடம் கடந்த சனியன்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை மீட்கும் பணி இன்னமும் முடியவில்லை. இது வரை 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 40 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.இந்த நிலையில், மண் பரிசோதனையே செய்யப்படாமல் அந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது, தரமான கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை, விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது என்று பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டிடம் இடிந்ததற்கு எது முக்கியமான காரணம் என்று தெரியவில்லை.
ஆனால், 11 மாடி கட்டிடம் கட்டுவதற்கு ஏற்ப அங்கு சாலை வசதி இல்லை என்றும், கட்டுமானத் திட்டத்திலேயே விதிமீறல் இருந்தது என்றும் இவற்றை சிஎம்டிஏ பரிந்துரையின் பேரில் அரசு வரன்முறை செய்து அரசாணைகள் பிறப்பித்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி சிஎம்டிஏ விதிகளை தளர்த்தி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தால், அது மிகப் பெரிய தவறு. விதிகளை மீறிய கட்டிட உரிமையாளர்கள் எந்த அளவுக்கு குற்றவாளிகளோ, அதே அளவுக்கு வரன்முறைப்படுத்த காரணமான அதிகாரிகளும் குற்றவாளிகளாக கருதப்பட வேண்டும்.
கடந்த பிப்ரவரி 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பு அளித்துள்ளது. அதாவது, சென்னையில் கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 1ம் தேதிக்கு முன்பு கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்காக 2012 அக்டோபரில் தமிழக அரசு ஒரு சட்டம் பிறப்பித்திருந்தது. அந்த சட்டத்தை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகர்வால் தலைமையிலான பெஞ்சு ரத்து செய்து தீர்ப்பளித்தது. சமூக ஆர்வலர்கள் டிராபிக் ராமசாமி, தாரா முரளி ஆகியோர் தொடர்ந்த வழக்கில்தான் இந்த தீர்ப்பு கூறப்பட்டது. விதிகளை மீறி கட்டிடம் கட்டுவோரை தண்டிப்பதற்கு பதிலாக சென்னை மாநகராட்சியும், சிஎம்டிஏவும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது என்று அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வாதத்தை ஏற்றுதான் உயர்நீதிமன்றம், சட்டத்தை ரத்து செய்தது.
விதிமீறல் கட்டிடங்களை இடித்தால் ஏராளமான பொருட்சேதம் ஏற்படும் என்பதால்தான் விதிகளை தளர்த்தி வரன்முறை செய்ய அப்போது அரசு முடிவெடுத்திருந்தது. ஆனால், இப்போது விதிகளை மீறி செயல்படுவதற்கு சிஎம்டிஏவே அனுமதி அளிப்பது போல், வரன்முறை செய்யும் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தால் அது எப்படி சரியாகும்? இது விதிகளை மீறுவோருக்கு அடைக்கலம் கொடுப்பதாகவே கொள்ளப்படும் என்பதை அரசு சிந்திக்க வேண்டும்.