‘பஞ்ச்’ வசனம் பேச ரஜினி மறுப்பு
சென்னை: ‘லிங்கா படத்தில் பஞ்ச் வசனங்கள் பேச மறுத்துவிட்டார் ரஜினிகாந்த்.ரஜினியின் படங்களில் ஹைலைட் பஞ்ச் வசனங்கள்தான். ‘நா ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி, ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன், என் வழி தனி வழி என்று படத்துக்கு படம் அவர் பேசிய பஞ்ச் வசனங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. பஞ்ச் வசனங்களுக்கு இருந்த வரவேற்பு மற்ற ஹீரோக்களையும் ஈர்த்தது. விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் என அனைத்து ஹீரோக்களும் பஞ்ச் பேசுவதில் ஆர்வம் காட்டினர்.பிறகு காமெடியன்கள் இந்த பாணியில் சகட்டுமேனிக்கு வசனம் பேசத் தொடங்கினர். கடைசியில் பஞ்ச் வசனம் பேசினாலே காமெடியாக பார்க்கும் அளவுக்கு நிலைமாறிவிட்டது. இந்நிலையில்தான் ரஜினியின் ‘கோச்சடையான் படம் திரைக்கு வந்தது. அதில் பஞ்ச் வசனம் எதுவும் இடம்பெறவில்லை. இதையடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ‘லிங்கா படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தின் டிஸ்கஷன் நடந்தபோதே பக்கம் பக்கமாக ரஜினிக்காக பஞ்ச் வசனங்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றிலிருந்து சிறந்த வசனங்களை ரவிகுமார் தேர்வு செய்தார். தற்போது ‘லிங்கா படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. சில முக்கிய காட்சிகளில் பஞ்ச் வசனம் பேசும்படி ரஜினியிடம் கூறினார் ரவிகுமார். ஆனால் அவரோ, ‘எல்லோரும் பஞ்ச் வசனம் பேசுகிறார்கள். நாமும் அதேபோல் பேச வேண்டுமா? என்றார். ‘உங்களிடம் ரசிகர்கள் அதைத்தான் எதிர்பார்ப்பார்கள் என்று ரவிகுமார் கூறினார். அருகில் இருந்த சந்தானமும் இதையே ரஜினியிடம் வலியுறுத்தினார். ஆனால் அதை ரஜினி ஏற்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து ‘லிங்கா படத்தில் பஞ்ச் வசனம் இடம்பெறுவது சந்தேகமே என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.