கொய்டோ:பழங்குடி மக்களிடம் இருந்து அவர்களது அனுமதி இல்லாமல் ரத்தத்தை திருட்டுத்தனமாக உறிஞ்சி எடுத்து 8 நாடுகளுக்கு அமெரிக்க லேப் ஒன்று விற்பனை செய்துள்ளதாக ஈக்வடார் நாடு பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது.தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் பகுதியில் அமைந்துள்ள நாடு ஈக்வடார். இங்கு கவுரானி என்றழைக்கப்படும் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். சுமார் 3 ஆயிரம் பேர் மட்டுமே மக்கள் தொகை கொண்ட கவுரானி மக்களிடம் அமெரிக்க மருத்துவ லேப் ஒன்று, அவர்களது அனுமதியின்றி உடலில் இருந்து ரத்தத்தை உறிஞ்சி எடுத்து 8 நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளதாக பரபரப்பு குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஈக்வடார் கல்வி மற்றும் அறிவியல் துறை அமைச்சகத்தின் செயலாளர் மரியா டெல் பைலர் கூறுகையில், ‘அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி நகரில் இயங்கி வரும் கொரியல் மருத்துவ ஆய்வு கழகம் என்ற நிறுவனம் பழங்குடி மக்களிடம் இருந்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரத்தத்தை உறிஞ்சி எடுத்து 8 நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு இது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். ஏற்கனவே மருத்துவ நிபுணர்கள் செய்த ஆய்வில் கவுரானி பழங்குடி மக்களின் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்களது மரபணு வித்தியாசமாக இருப்பதாகவும், ஆய்வாளர்களுக்கு அவர்களது ரத்த மாதிரிகள் அதிகம் தேவைப்படுவதால் அவற்றை எடுத்து சென்றிருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்தியா, ஜெர்மனி, பிரேசில், கனடா, அமெரிக்கா, இத்தாலி ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு கவுரானி பழங்குடி மக்களின் ரத்த மாதிரிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என ஈக்வடார் கருதுகிறது. அங்கு வசிக்கும் சுமார் 600 பேரிடம் இருந்து எடுக்கப்பட்ட 3500 ரத்த மாதிரிகளை இந்த லேப், 8 நாடுகளின் ஆராய்ச்சியாளர்களுக்கு விற்பனை செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு கவுரானியன் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து இதுகுறித்து ஈக்வடார் விசாரணையை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது