சென்னை: ஹம்லா பாதுகாப்பு ஒத்திகையின் இரண்டாவது நாளான இன்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை உள்பட 13 கடலோர மாவட்டங்களில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பாதுகாப்பு ஒத்திகை ‘ஹம்லா ஆபரேஷன்Õ நேற்று துவங்கியது. இன்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும் தொடர்ந்து நடக்கிறது. தீவிரவாதிகள் போல் வேடம் அணிந்து கடல் வழியாக சென்னைக்குள் ஊடுருவ முயன்ற 21 பேரை போலீசார் நேற்று சுற்றி வளைத்தனர். இந்த சோதனையின் போது, கோயம்பேட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 8.5 கிலோ தங்கத்தை கொண்டு வந்த வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சிக்கினார். அவரிடம் இருந்து ரூ.8 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த வட மாநிலத்தவரை சோதனை செய்த போது, அவரிடம் இருந்து 8 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. டிபி சத்திரத்தில் கஞ்சா கடத்திய 2 பேரும் சிக்கினர்.
இந்நிலையில், இன்று அதிகாலை படகு மூலம் மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் அருகே கடல் வழியாக தீவிரவாதிகள் போல் வேடமிட்டு ஊடுருவ முயன்ற மேலும் 5 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். அதேபோல், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்ல முயன்ற மண்ணடி புதுத் தெருவை சேர்ந்த முகமது தம்பி (36) என்பவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தபோது, அதில் ரூ.7 லட்சம் இருந்தது. அதற்கான ஆவணம் ஏதும் இல்லை. இதைத் தொடர்ந்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கோயம்பேட்டில் இருந்து ஆரணி செல்ல முயன்ற அரும்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீராமுலு (53) என்பவரின் கைப்பையை சோதனை செய்தபோது, அதில், ரூ.6 லட்சம் இருந்தது. இதற்கும் போதிய ஆவணம் இல்லை. இதைத் தொடர்ந்து இந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இன்று மாலையுடன் பாதுகாப்பு ஒத்திகை நிறைவடைகிறது.