திருவனந்தபுரம்: ஈராக் நாட்டில் உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா திரும்ப விரும்பும் கேரள மாநிலத்தவர்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. ஈராக் நாட்டில் சன்னி, ஷியா மற்றும் குர்த் என 3 இன மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக உள்ளனர். சதாம் உசைன் சன்னி இனத்தை சேர்ந்தவர். ராணுவ பலத்தில் மற்றவர்களை அடக்கி ஆட்சி செய்து வந்தார். அவரது ஆட்சி வீழ்ந்த பிறகு அமெரிக்க மேற்பார்வையில் அங்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஷியா மற்றும் குர்த் இனத்தை சேர்ந்தவர்கள் ஆட்சியை பிடித்தனர். சன்னி இன மக்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து ஒதுக்கப்பட்டனர். தற்போது சன்னி இன மக்கள் ஆதரவுடன் அல்கொய்தா பயிற்சி பெற்ற ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத இயக்கம் அரசுக்கு எதிராக யுத்தம் தொடங்கியுள்ளது. மொசூல், திக்ரித் போன்ற முக்கிய நகரங்கள் ஐஎஸ்ஐஎஸ் கைப்பற்றியுள்ளது. மொசூல் நகரில் 40 இந்தியர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். இவர்களை மீட்க இந்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இதே போல் திக்ரித் நகரில் மருத்துவமனை ஒன்றில் இந்தியாவை சேர்ந்த குறிப்பாக கேரளாவை சேர்நத நர்ஸ்கள் ஏராளமான பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ளனர். இதுவரை 16 இந்தியர்கள் ஈராக்கிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஏராளமானவர்கள் இந்தியா திரும்ப விருப்பம் இருந்தும், போர் காரணமாக தாங்கள் குடியிருக்கும் இடத்தைவிட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். ஒரு சிலருக்கு விசா பிரச்னையும் உள்ளது. இந்நிலையில் ஈராக்கிலிருந்து இந்தியா திரும்ப விரும்பும் கேரள மாநிலத்தவர்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்க கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகள் குறித்து உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈராக்கில் சிக்கி தவிக்கும் கேரளமாநிலத்தவர்களில் பெரும்பாலானவர்கள் உடனடியாக நாடு திரும்பவே விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் நாடு திரும்ப ஆகும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும். அது சாத்தியமில்லை என்றால் அந்த செலவை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும். இது தொடர்பாக பிரதமருக்கும், வெளியுறவு அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன் என்றார்.