பெஷாவர்: பாகிஸ்தானில் பெஷாவர் விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கிய விமானத்தின் மீது தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் பெண் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் இருந்து பிகே 756 என்ற பயணிகள் விமானம் 178 பயணிகளுடன் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகருக்கு நேற்று இரவு வந்தது. விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது விமானத்தை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் விமானத்தை 6 தோட்டாக்கள் துளைத்து சென்றன. விமானியை நோக்கி குறிவைத்து தாக்கப்பட்ட இந்த தாக்குதலில் நூலிழையில் விமானி உயிர் தப்பினார். ஆனால், இந்த தாக்குதலில் விமானத்திற்குள் இருந்த பெண் பயணி ஒருவர் உயிரிழந்தார். 3 ஊழியர்கள் படுகாயமடைந்தனர். விமானத்தின் என்ஜினை ஒரு குண்டு தாக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.இது பற்றி, விமான நிலைய அதிகாரி முகமது கிபாயத்துல்லா கூறுகையில், ‘உயிரிழந்த பெண் பயணிக்கு அருகில் அவரது மகள்கள் இருந்துள்ளனர்.
அவர்கள் கண் எதிரிலேயே தாய் தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளார். நான் விமானத்திற்குள் நுழைந்த போது 9 வயது பெண் குழந்தை, என் அம்மா இறந்து விட்டார் என அழுது கொண்டிருந்தாள்’ என்றார். இந்த தாக்குதலால் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பீதியில் உறைந்தனர். வெளியில் என்ன நடக்கிறது என்பதை உடனே தெரிந்து கொள்ள முடியததால் அவர்கள் கீழே இறங்காமல் அச்சத்துடன் இருந்தனர். விமானி அதிர்ஷ்டவசமாக தப்பியதால் அவர் சாதுர்யமாக விமானத்தை ஓடுதளத்தில் நிலை நிறுத்தினார். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் விமானத்தை சுற்றி வளைத்தனர். உள்ளே இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர்.கடந்த 8ம் தேதி, கராச்சி விமான நிலையத்திற்குள் 10 தீவிரவாதிகள் புகுந்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற சண்டைக்கு பிறகு தீவிரவாதிகள் உள்பட 28 பேர் பலியாயினர். தற்போது, பெஷாவர் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.
வசிரிஸ்தான் பகுதியில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையை கண்டித்து தலிபான்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.தீவிரவாதிகள் சுட்டு3 போலீசார் சாவு பாகிஸ்தானில் கராச்சிக்கு அருகே மங்கோபீர் என்ற இடத்தில் நேற்று காலை பாகிஸ்தான் போலீசார் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மறைவான இடத்தில் பதுங்கியிருந்த தலிபான் தீவிரவாதிகள், அவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் சோமர்(38), குலாம் அலி(40), முனாவர்(43) என்ற 3 போலீசார் கொல்லப்பட்டனர். ஒரு போலீஸ்காரர் மற்றும் சிலர் படுகாயம் அடைந்தனர். போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகள் உடனடியாக தப்பி ஓடிவிட்டனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.கடந்த 3 நாட்களுக்கு முன் பாதுகாப்பு படையினரின் ரோந்து பணியின்போது தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 4 தொழிலதிபர்களும் வியாபாரிகளும் மீட்கப்பட்டனர். இதன்பின், இவ்வார துவக்கத்தில் நடைபெற்ற மோதலில் 5 தலிபான் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.