வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
மதுராந்தகம்: வரதட்சணை கேட்டு கணவர் விரட்டியதால் பெற்றோர் வீட்டில் புதுப்பெண் தற்கொலை செய்தார்.காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் கோட்டி. இவரது மகள் புவனேஸ்வரி (20). இவருக்கும் செய்யூர் அருகே புத்தூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (24) என்பவருக்கும் கடந்த 7 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது புவனேஸ்வரிக்கு நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர். அந்த நகைகளை வேல்முருகன் அடமானம் வைத்து பணத்தை செலவு செய்துள்ளார். இந்த நிலையில், மேலும் நகை, பணம் வாங்கி வா என்று புவனேஸ்வரியை அடித்து உதைத்து அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டார். நேற்று பெற்றோர் வீட்டில் தனியாக இருந்த புவனேஸ்வரி, மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது பற்றிய புகாரில், மதுராந்தகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, புவனேஸ்வரி சடலத்தை மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். திருமணம் நடந்து 7 மாதமே ஆவதால் மதுராந்தகம் ஆர்டிஓ விசாரணை நடத்துகிறார்.