வருமான வரியில் பெண்களுக்கு சலுகை அளிக்க மத்திய அரசு திட்டம்
புதுடெல்லி: வருமான வரியில் பெண்களுக்கு சிறப்பு சலுகை அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட் வரும் 10ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு வரம்பு ரூ. 3 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2012&13 பட்ஜெட்டின் போது ஆண், பெண் இருவருக்கும் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் பெண்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை கூடுதல் சலுகை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெண்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வருமான வரி சிறப்பு சலுகையை மீண்டும் அறிமுகப்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முறை ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை சிறப்பு சலுகை பெண்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஆண்களுக்கு ரூ. 3 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படுமானால் பெண்களுக்கு ரூ. 3.25 லட்சம் அல்லது ரூ. 3.50 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 65 வயதை கடந்த முதியோர்களுக்கு வருமான வரியில் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த வயது வரம்பை 60ஆக குறைக்கும் திட்டமும் மத்திய அரசிடம் இருப்பதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.