மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ வீட்டு வசதித் திட்டங்களை பல ஆண்டுகளாக செயல்படுத்தி வந்தாலும் இன்னமும் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு சொந்த வீடு என்பது கனவாகவே இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அரசும், எல்லா குடும்பத்துக்கும் வீடு கட்டித் தர புதிய திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்திருக்கிறது.தமிழகத்தை பொறுத்தவரை, நடுத்தர வர்க்க மக்கள், அரசு திட்டங்களை எதிர்பார்க்காமல் தங்கள் வருமானத்தில் சிறிது, சிறிதாக சேமித்து வீடு கட்டுவதை ஒரு லட்சியமாக வைத்து செயல்படுகிறார்கள். ஆனால், மக்களின் வருமானம் எத்தனை சதவீதம் அதிகரித்தாலும், அதை விட பல மடங்கு விலைவாசி அதிகரித்து விடுகிறது. குறிப்பாக, சிமென்ட், ஜல்லி உள்பட கட்டுமானப் பொருட்களின் விலைகள் கடந்த 10 நாட்களில் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளது. சிமென்ட் விலை மூட்டைக்கு ரூ.70 வரை உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ.360ஆகியுள்ளது.
ஒரு டன் இரும்பு கம்பி கடந்த மாதம் வரை ரூ.38 ஆயிரமாக இருந்தது. தற்போது இது தரத்துக்கு ஏற்ப ரூ.56 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. அதே போல், ஒரு லோடு ஜல்லி ரூ.11,200க்கு விற்பனையாகி வந்தது. தற்போது ரூ.15,200க்கு விற்பனையாகிறது. ஒரு லோடு மணல் ரூ.24 ஆயிரத்துக்கு கிடைத்தது. தற்போது இது தரத்துக்கு ஏற்ப ரூ.32 ஆயிரம் வரை விலை ஏற்றப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம், லாரிகளில் அதிக பாரம் ஏற்றக் கூடாது என அரசு புது உத்தரவு போட்டிருப்பதுதான் என கட்டுமான தொழிலில் உள்ளவர்கள் கூறுகின்றனர். கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக, வீடு கட்டும் செலவு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு சதுர அடிக்கான கட்டுமானச் செலவு நீண்ட நாட்களாக ரூ.1000 முதல் ரூ.1200 வரையாகவே இருந்தது.
தற்போது இது ரூ.1600 வரை உயர்ந்திருக்கிறது. இதனால், வீடு கட்டி வரும் நடுத்தர குடும்பத்தினர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக சென்னையில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் சங்கம் அறிவித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, சிமென்ட் உற்பத்தியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது, போதிய அளவு மணல் கிடைக்கச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு நடவடிக்கையால் கட்டுமானப் பொருட்களின் விலை குறையாவிட்டாலும் மேலும் உயராமல் தடுக்கலாம்.