புதுடெல்லி: ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களையும் மனித கேடயமாக பயன்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தப்பிய இந்தியர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். ஈராக்கில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையோன சண்டை தீவிரமடைந்துள்ளது. அல்கய்தாவின் ஆதரவு பெற்ற ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாதிகள், சிரியாவின் ஆதரவுடன் ஈராக்கை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிரவாதிகள் ஈராக்கில் உள்ள சன்னி பிரிவினரின் உதவியுடன் மொசூல், திக்ரித், ஜாதியா, ஜலாலா போன்ற முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளனர். ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள் வேகமாக முன்னேறி வருகின்றனர். இதற்கிடையில் மொசூல் நகரில் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த 40 இந்தியர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இந்திய வெளியுறவுத் துறையும் அவர்கள் கடத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தது. ஈராக்கில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாபை சேர்ந்தவர்கள். ஆந்திரா, தமிழகத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளர்களும் இருக்கலாம் என தெரிகிறது. இதற்கிடையே 40 இந்தியர்களில் ஒருவர் மட்டுமே உயிர்தப்பி, வங்கதேசத்தை சேர்ந்தவர்களுடன் பாக்தாத் நகருக்கு தப்பி வந்துள்ளதாக தகவல் வெளியானது. 40 பேரில் ஒருவரான ஹர்ஷித் சிங் என்பவர் பஞ்சாபில் பேட்கார் மாவட்டத்தில் வசிக்கும் தனது சகோதரர் சரன்ஜித் சிங்கை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது 40 பேரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், 40 இந்தியர்களும் அங்கிருந்து வெளியேறினால் அவர்களை ஈராக் அல்லது ஈரான் நாட்டு அரசு படைகள் கொல்லக் கூடும். அப்படி கொன்று விட்டு அந்தப் பழியை தீவிரவாதிகள் மீது சுமத்தக் கூடும் என தீவிரவாதிகள் தங்களிடம் கூறியதாகவும் ஹர்ஷித் சிங் தெரிவித்திருக்கிறார்.
எனவே, இந்திய அரசு உயர் அதிகாரிகள் வந்தால் இந்தியர்கள் அனைவரையும் விடுவிக்க தயார் என ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கூறியுள்ளதாக ஹர்ஷித்சிங் தெரிவித்திருந்தார். தற்போது, 40 பேரையும் மீட்பதற்காக ஏற்கனவே ஈராக்கில் இந்திய தூதராக பணியாற்றிய சுரேஷ் ரெட்டியும் பாக்தாத் விரைந்துள்ளார். இதற்கிடையில் சிரியா எல்லையில் உள்ள அல் ஹசேகா மற்றும் நினோவாக்கு இடையிலான மிகப் பெரிய பிராந்தியத்தை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இதனால் பிரதமர் நூரி அல் மாலிக்கி பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய ஹர்ஷித் சிங் தற்போது பாதுகாப்பாக எர்பில் என்ற இடத்தில் இருப்பதாக தெரிகிறது. அவர் குர்தீஷ் அதிகாரிகளிடம் கூறுகையில், Ôஇந்தியர்களை பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ள தீவிரவாதிகள், தங்களை அரசுப்படைகளோ, அமெரிக்க படைகளோ சுற்றி வளைத்தால், தப்பிச் செல்வதற்கு இந்திய பணய கைதிகளை மனித கேடயமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்Õ என்று தெரிவித்துள்ளார். இத்தகவலை குர்தீஷ் அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர். இதனால் ஈராக்கில் இந்தியர்களின் நிலை மேலும் சிக்கலாக மாறியுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறுகையில், தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் இந்தியர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை என்று உறுதிபட தெரிவித்தார். ஹர்ஷித் சிங் உள்பட 40 கட்டுமானத் தொழிலாளர்களையும் கடந்த 15ம் தேதி மொசூல் நகரத்தில் இருந்து தீவிரவாதிகள் பிடித்து சென்றுள்ளனர். முதலில் அவர்களிடம் இருந்து தப்பிய ஹர்ஷித் சிங் மொசூலில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் உள்ள எர்பிலுக்கு தப்பி வந்துள்ளார். இந்த பகுதி குர்திஷ்தானின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இதுகுறித்து ஹர்ஷித் சிங் கூறுகையில், அடைத்து வைக்கப்பட்டிருந்த நான் கம்பி வேலியை தாண்டி குதித்து வங்காளதேசத்தினருடன் சேர்ந்து தப்பி வந்ததாக தெரிவித்தார் என பாக்தாத் இந்திய தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
தங்களிடம் சிக்கியவர்களை ஆயுதங்களை சுமந்து செல்ல தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், வங்காளதேசத்தினர் தெரிவித்த தகவல்களுக்கும், ஹர்ஷித் சிங் தெரிவித்த தகவல்களுக்கும் மத்தியில் நிறைய வேறுபாடு உள்ளது. இருந்த போதிலும் அங்குள்ள பல்வேறு நிறுவனங்கள், அமைதி படையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் தொடர்பு கொண்டு இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு தீவிரமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.