தமிழகம், கர்நாடகம் இடையிலான காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் நடுவர் மன்றம், 2007ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கியது. அதன்படி, காவிரியில் ஆண்டுக்கு சராசரியாக கிடைக்கும் 736 டிஎம்சி தண்ணீரில் கர்நாடகாவுக்கு 271 டிஎம்சி, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 5 டிஎம்சி என பங்கிட்டு கொள்ள வேண்டும். மேலும், நதி நீர் பங்கீட்டை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியம், காவிரி கண்காணிப்பு குழு ஆகியவற்றை அமைக்கவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடகம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கிடையே, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசு கெசட்டில் வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு செயல்பட வேண்டும். எனினும், முந்தைய காங்கிரஸ் அரசு இந்த விஷயத்தில் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.இந்த சூழ்நிலையில், பாஜ அரசு அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி, மாநிலங்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படத் தொடங்கியுள்ளார். அவரை தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் வலியுறுத்தியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, மத்திய நீர்ப்பாசன அமைச்சர் உமாபாரதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி தனது துறை அதிகாரிகளிடம் ஆலோசித்தார். இந்த தகவல் வெளியானதும், கர்நாடகாவில் காங்கிரசை சேர்ந்த முதல்வர் சித்தராமையா உடனடியாக அரசியல் மாச்சரியங்களை மறந்து, பாஜவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, அனந்தகுமார் ஆகியோரிடம் பேசி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடாமல் தடுக்க முயற்சித்துள்ளார், அதுமட்டுமில்லாமல், அனைத்து கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், தமிழகத்தில் அதற்கு போட்டியாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மாநில அரசு பொறுப்பில் உள்ளவர்கள்தான் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கர்நாடகாவை போல் அனைத்து கட்சி கூட்டம் நடத்துவது, அனைத்து கட்சித் தலைவர்களையும் நமது மாநிலத்தின் ஒரே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் டெல்லிக்கு அனுப்பி பிரதமரை சந்திப்பது போன்ற கூட்டு முயற்சிகளை அரசுதரப்பில் மேற்கொள்ளலாம். இந்த விஷயத்தில் காலம் தாழ்த்தாமல் நமது நியாயத்தை மத்திய அரசிடம் வலியுறுத்தினால், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது சாத்தியமாகும்.