இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக டங்கன் பிளட்சர் உள்ளார். சமீபத்தில் தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து தொடரில் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டிக்கு கூட இந்தியா நுழையவில்லை. இதனால் இந்திய அணி மீது விமர்சனங்கள் குவிய தொடங்கியுள்ளது. பயிற்சியாளர் டங்கன் பிளட்சரின் பதவி காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. அவரை உடனடியாக நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டுமென்று விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியது:
பிளட்சர் காலத்தில் இந்திய அணி எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. அவருக்கு நான் 10க்கு 1.5 மார்க் தான் கொடுப்பேன். கேரி கிறிஸ்டன் பயிற்சியாளராக இருந்த போது இந்திய அணி சிறப்பாக இருந்தது. அவரது உழைப்புக்கு வீரர்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருந்தது. உலககோப்பை போட்டி நெருங்கி வரும் வேளையில் பயிற்சியாளரை மாற்றுவது சாதகமான முடிவாக இருக்காது என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் அப்படி செய்யாவிட்டால் இந்திய கிரிக்கெட் அணி வீழ்ச்சியை சந்திக்கும். பிளட்சரின் கிரிக்கெட் வாழ்க்கையும் சொல்லிக் கொள்ளும்படி கிடையாது.
அவர் எதையும் சாதிக்கவில்லை. முன்னணி வீரர்களான சேவக், காம்பீர், ஹர்பஜன்சிங் போன்றோர் பார்மில் இல்லை என்பதால் அவர்களை அணியில் இருந்தே நீக்கியவர்கள் ஏன் பிளட்சரை நீக்க கூடாது. இப்போதுள்ள சூழ்நிலையில் இந்திய அணிக்கு இளம் பயிற்சியாளர் தேவை. அதற்கு பொருத்தமானவர் ராகுல் டிராவிட் தான். அனைவரது மனதிலும் மரியாதை மிக்கவராக உள்ளார்.
அவரது தலைமையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து தொடரை கைப்பற்றியுள்ளது. இந்திய வீரர்கள் மற்றும் நட்சத்திர வீரர்கள் கூட டிராவிட்டின் பேச்சை கேட்பார்கள். எனவே இந்திய அணிக்கு பொருத்தமான பயிற்சியாளராக அவர் இருப்பார்.