சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது பிரபல கலைஞர்கள் பங்கேற்பு
சிதம்பரம்:கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் 33வது நாட்டியாஞ்சலி விழா நேற்று மாலை தொடங்கியது. 5 நாட்கள் இந்த விழா நடக்கிறது. இதில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்தும் பிரபல பரத நாட்டிய கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளான நேற்று இந்துமாலினி, அனுஷியா ஹரிகரன், அண்ணாமலை பல்கலைக்கழக கலைத்துறை மாணவர்கள், அமெரிக்கா பத்மாராணி ராசையா கண்ட்டு ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. பிரபல பரத நாட்டிய கலைஞர்கள் டாக்டர் பத்மா சுப்பிரமணியம், ஊர்மிளா சத்யநாராயணன் ஆகியோர் நிகழ்ச்சி நடத்தினார்கள்.
நாட்டியாஞ்சலி துவக்க விழாவுக்கு சிவக்குமார் தீட்சிதர் தலைமை வகித்தார். நடராஜர் கோயில் தீட்சிதர்களின் செயலாளர் காசிராஜ தீட்சிதர் முன்னிலை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நாட்டியாஞ்சலி விழாவை தொடங்கி வைத்து பேசுகையில், ‘ஜெனீவாவில் உள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி கூடத்தில் 2 மீட்டர் உயரம் உள்ள நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அது வைக்கப்பட்டதற்கான காரணத்தையும் கூறியுள்ளனர். தில்லையில் ஆடும் நடராஜர் போல் இந்த இயற்பியல் நிகழ்ச்சியும் உள்ளது.
அணுவை பிளக்கின்ற போது அணுக்கூறுகள் எப்படி ஆட்டம் போடுகின்றதோ அதை நடராஜரின் நடனம் பிரதிபலிக்கிறது. மிகப்பெரிய பாரம்பரியத்தை நாம் சொத்தாக பெற்றுள்ளோம். அந்த சொத்தை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு இந்த நாட்டியாஞ்சலி மூலம் எடுத்து செல்வது பாராட்டுக்குரியது‘ என்றார்.
டிஎஸ்பி ராஜாராம், புதுடெல்லி சங்கீத நாடக அகாடமி கீதா சந்திரன், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை துணைத்தலைவர் பாலதண்டாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.