திருப்போரூர்:ஏலச்சீட்டு தகராறில் ஓய்வு பெற்ற டிரைவர் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கேளம்பாக்கம் அருகே நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேளம்பாக்கம் அருகே வேங்கடமங்கலம் சுபாஷ் சந்திர போஸ் நகரை சேர்ந்தவர் அம்பிகாராஜ் (65). சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு புஷ்பராணி என்ற மனைவியும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். விஜயலட்சுமிக்கு திருமணமாகி கணவருடன் வசிக்கிறார். அம்பிகாராஜ், ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் 25க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்தனர்.
அதே பகுதியில் அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்த மணி சிங் என்பவரும் சீட்டு கட்டி வந்தார். கடந்த 3 மாதங்களாக அவர் பணம் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சீட்டு எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் அம்பிகாராஜ் தவித்தார். இந்நிலையில், எப்படியாவது இன்று பணத்தை வசூல் செய்து விட்டு வந்து விட வேண்டும் என எண்ணி, மணி சிங் வீட்டுக்கு இன்று காலை 9 மணியளவில் அம்பிகாராஜ் சென்றார்.
அங்கிருந்த மணி சிங்கிடம், சீட்டு பணம் கட்டாதது குறித்து கேட்டுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த மணி சிங்கின் மகன் ராஜதுரை (21), ‘பணத்தை கொடுக்க முடியாது, உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று அம்பிகாராஜிடம் கோபமாக கூறியுள்ளார். இதனால் வாக்குவாதம் அதிகரித்து கைகலப்பானது. ஆத்திரத்தில் வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்து வந்த ராஜதுரை, சரமாரியாக அம்பிகாராஜின் தலையில் வெட்டினார். தலை கழுத்து உள்ளிட்ட பகுதியில் பலத்த வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த அவர் கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே இறந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் ராஜதுரை தப்பி விட்டார்.
தகவல் அறிந்து தாளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து தப்பி ஓடிய ராஜதுரையை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.