ஓசூர் அருகே யானையை சுட்டுக் கொன்று தந்தம் கடத்திய 5 பேர் கைது
ஓசூர்:ஓசூர் அருகே வனப்பகுதியில் யானையை சுட்டுக் கொன்று தந்தங்களை கடத்திய வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மாரண்டஅள்ளி காப்புக் காடு தெற்கு சரகத்தில் கடந்த மாதம் 21ம் தேதி 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. தகவல் அறிந்து அங்கு வனக்குழுவினர் அங்கு சென்றனர். மேலும் கால்நடை மருத்துவர் டாக்டர் பிரகாஷ் தலைமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் யானை துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தது தெரியவந்தது. மேலும் யானையின் 2 தந்தங்களும் திருடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மாரண்டஅள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சிலர் யானையை சுட்டுக் கொன்று, தந்தங்களை கடத்தியது தெரிய வந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய வனத்துறையினர், தேன்கனிக்கோட்டை அருகே மூக்கங்கரையை சேர்ந்த பசுவராஜ் (35), பெட்டமுகிலாளத்தைச் சேர்ந்த சந்திரன் (33), கோட்டையூர் கொல்லையைச் சேர்ந்த மாதன் (25) உள்பட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 5 பேருக்கு தொடர்புள்ளது தெரிய வந்தது. இதன் பேரில் நேற்று மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, ஒரு ஜோடி தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் உலகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, வனத்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேட்டை தடுப்பு முகாம்களில் அதிக பணியாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.