ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக்க மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரை
ஐதராபாத்:ஆந்திர தலைநகர் ஐதராபாத்தை யூனியன்பிரதேசமாக அறிவிக்க மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. ஆந்திராவை பிரித்து தெலங்கானா புதிய மாநிலம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தெலங்கானாவுக்கும், சீமாந்திராவுக்கும் ஐதராபாத் 10 ஆண்டுகள் பொது தலைநகராக இருக்கும் என தெலங்கானா மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவை பிரிக்க சீமாந்திரா பகுதி மக்கள் மற்றும் அரசியல்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களது எதிர்ப்பை மீறி தெலங்கானா தனி மாநிலம் உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதனால் தெலங்கானா மசோதா தற்போதைய வடிவத்தில் தாக்கல் செய்யக்கூடாது எனவும், அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் எனவும் சீமாந்திரா தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் கோரிக்கையாகும். இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் குழு உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் நேற்று கூடி ஆலோசனை நடத்தியது. இதில் ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் சுஷில்குமார் ஷிண்டே மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து அமைச்சர்கள் குழு பரிந்துரைகள் குறித்து விளக்கம் அளித்தனர். சோனியாவின் ஒப்புதலுக்கு பின்னர் திருத்தி அமைக்கப்பட்ட தெலங்கானா மசோதா வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என தெரிகிறது. இதற்காக மத்திய அமைச்சரவையின் சிறப்பு கூட்டத்துக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.