சென்னை:நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக உள்ளன. தமிழகத்தில் பாஜ தலைமையிலான அணியில் மதிமுக, பாமக, கொங்கு நாடு முன்னேற்ற கழகம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சி, ஸ்ரீதர் வாண்டையார் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம், முஸ்லீம் கட்சிகள் உள்ளிட்டவை சேர்ந்துள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் கூட்டணி உறுதியாகி உள்ளது. மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தேமுதிகவையும் தங்கள் கூட்டணியில் சேர்க்க பாஜ நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர்.
எனினும், எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்பதில் இழுபறி நீடித்து வருகிறது. தேமுதிகவை இழுக்கும் முயற்சியிலும் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தும் பணிகளில் பாஜ நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், கூட்டணி குறித்து பாமக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதை தள்ளி வைத்துள்ளனர். இது குறித்து பாஜ மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
நரேந்திர மோடி பொதுக் கூட்டம் முடிந்த பின்பு, கூட்டணியில் இடம்பெறவுள்ள கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்படும். அதற்கு முன்பாக, கூட்டணி கட்சி தலைவர்களை எப்படியாவது நாளை நரேந்திர மோடி கூட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளோம். அப்படி கூட்டணி தலைவர்கள் வராத பட்சத்திலும், பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படும்’ என்றனர்.
இந்நிலையில், பா.ஜ. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நாளை மாலை 3 மணிக்கு சென்னையை அடுத்த வண்டலூர் விஜிபி மைதானத்தில் நடக்கிறது. பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். மேலும், பாஜ மூத்த தலைவர்களும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டிற்காக 100 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. தலைவர்கள் அமரும் வகையில் 200 அடி அகலத்தில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் பிரமாண்டமாக மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் மொத்தம் 10 லட்சம் பேரை திரள்வார்கள் என்று பாஜ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்துக்கு வரும் மோடிக்கு பாஜ தலைமை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை வரை மேளதாளங்கள் முழுங்க வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மோடி செல்லும் பாதையின் இருபுறமும் மற்றும் சென்னையின் பல்வேறு இடங்களில் மோடியை வரவேற்று பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மோடி வருகையையொட்டி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வண்டலூர் கூட்டத்தில் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த பகுதியில் இன்றே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை பழைய விமான நிலையம் தமிழக போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.