இந்தியாவில் கழிவுப்பொருட்கள் மேலாண்மை பெரிய தலைவலியாக உருவெடுத்து வருகிறது. நாகரீகம் பெருக, பெருக கிராமங்களில் இருந்து நகரங்களில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது போதாது என்று பெருகி வரும் தொழிற்சாலைகளின் கழிவுகளும் சுற்றுச்சூழலை மிரட்டிக் கொண்டிருக்கின்றன. வளர்ந்த நாடுகளில், பொது மக்களிடையே கழிவுப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு அதிகளவில் உள்ளது. இதனால் மக்கும் பொருட்கள், மக்காத பொருட்கள் ஆகியவற்றை பைகளில் பிரித்து, குப்பை வண்டிகள் வரும்போது அதில் போடுகின்றனர்.
பிரிப்பு பணி எளிதாக்கப்பட்டு, பல டன் மக்கும் பொருட்கள் ஒன்று சேர்த்து பெரும் அழுத்தத்தின் மூலம் கன்டெய்னர் அளவில் கட்டிகளாக ஆக்கப்பட்டு பூமியில் புதைக்கப்படுகிறது. குப்பை கட்டிகளுக்காக, கைவிடப்பட்ட சுரங்கப்பகுதிகள் உள்ளிட்ட பயன்படுத்தப்படாத பகுதிகள் உபயோகப்படுத்திக் கொள்ளப்படுகிறது. தாவர மற்றும் பிற கழிவுகளில் ஒரு பகுதி மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
மக்காத பொருட்களை ரகம் வாரியாக பிரித்து, அவை மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. எதற்குமே பயன்படாதவை என்று பட்டியலிடப்பட்ட பொருட்கள், உயர் வெப்பத்தில் புகை வராத அளவுக்கு எரிக்கப்பட்டு விடுகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் இந்த நிலை. ஆனால், இந்தியாவின் நிலையை ஆராய்ந்தால், அதிர்ச்சிதான் மிஞ்சும். குடியிருப்புகளுக்கு அருகிலேயே குப்பை கிடங்குகளை அமைத்து, மலை போல் குவிக்கப்படுகின்றன. இவற்றை முறையாக தரம் பிரிப்பதில்லை. சில நேரங்களில் குப்பை கிடங்குகளில் இருக்கும் ஊழியர்கள், மேலும் குப்பைகளை குவிப்பதற்காக இருக்கும் குப்பைகளை தீ வைத்து எரித்து விடுகின்றனர்.
சென்னையில் நாளொன்றுக்கு மக்காத பிளாஸ்டிக் பைகள் 3,400 டன் அளவுக்கு பயன்பாட்டுக்கு வருகின்றன. இவற்றில் 35 முதல் 40 டன் பிளாஸ்டிக் பைகள் அடுத்த அரைமணி நேரத்திலேயே குப்பைக்கு சென்று விடுகின்றன. கால்நடைகள் பிளாஸ்டிக் பைகளில் மிச்சம், மீதி ஒட்டியிருக்கும் உணவுக்காக அப்படியே அவற்றை உட்கொண்டு படாதபாடுபடுகின்றன. சில நேரங்களில் உயிரையும் இழக்கின்றன. இது மட்டுமின்றி, சுற்றுச்சூழலையும் பெருமளவில் இந்த பிளாஸ்டிக் குப்பைகள் பாதிக்கின்றன.
இந்த சூழ்நிலையில், குப்பை மேலாண்மை மிக அவசியம். தமிழகத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் தொடங்கப்படுகின்றன. ஆனால், ஒரு சில ஆண்டுகளில் இவை காணாமல் போய்விடுவதுதான் வருத்தம். உண்மையான அக்கறையுடன் இதுபோன்ற தொழிற்சாலைகளை செயல்படுத்த அரசு திட்டமிட்டால், கழிவு மேலாண்மையால் வருங்காலத்தில் பெரிய அளவில் பிரச்னை உருவாகாமல் தடுக்கலாம்.