திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதம் லட்டின் தரம் உயர்த்துவது குறித்து அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெற உள்ள அறங்காவலர் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என அறங்காவலர் குழு உறுப்பினர் கன்னையா நிருபர்களிடம் தெரிவித்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. பழங்காலத்தில் நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகிய பொருட்களை அதிக அளவில் சேர்த்து பிக்டம் என்ற பெயரில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டு வந்தது. இது நீண்ட நாட்களுக்கு கெடாமல், சுவை மிகுந்ததாக இருந்தது.
ஆனால் தற்போது தயாரிக்கப்படும் லட்டு பிரசாதம் தரம் குறைந்துள்ளதோடு நீண்ட நாட்களுக்கு வைத்துக்கொள்ள முடியாத நிலையில் உள்ளது. எனவே பழங்காலத்தில் உள்ள பிக்டம் முறையில் தரமான லட்டு தயாரித்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதுகுறித்து அறங்காவலர் குழு உறுப்பினர் கன்னையா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தற்போது பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் 2 நாட்களுக்குள் சுவை, தரத்தை இழந்து விடுவதால் பழங்காலமுறைப்படி லட்டு தயாரித்து வழங்கும்படி கடந்த முறை நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில் கேட்டுக்கொண்டோம்.அப்போது, சென்னையில் உள்ள தனியார் இனிப்பு கடையில், திருப்பதி லட்டு போன்றே தயார் செய்து விற்பனை செய்து வருவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தேவஸ்தானம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் இந்த நிலையில் லட்டு தயாரிக்கும் முறையை மாற்றினால் அது தனியார் நிறுவனத்துக்கு பயந்து மாற்றியது போலாகிவிடும் என்பதால், அதை மாற்ற முடியாது என தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் எம்.ஜி கோபால் தெரிவித்தார்.
தற்போது ஆந்திர மாநில சட்டமன்றத்தில் தெலங்கானா மசோதா குறித்த விவாதம் நடந்து வருவதால் தேவஸ்தான உறுப்பினர்கள் நேற்று நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. வரும் பிப்.9ம் தேதி நடைபெற உள்ள அறங்காவலர் குழு கூட்டத்தில் பழைய முறைப்படி லட்டு தயாரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.