சமீப காலமாக காவல் துறையில் பணியாற்றுவோர் மது குடித்து விட்டு பொது இடங்களில் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்வது அதிகமாக நடைபெறுகின்றன. போதையில் தொப்பியை விலை பேசிய ஏட்டு, போதையில் கட்டிப் புரண்ட போலீசார் என பத்திரிகைகளில் அடிக்கடி செய்திகளை பார்கக முடிகிறது. இந்த வரிசையில் பத்திரிகைகளில் நேற்று வெளியான செய்தி, ‘போதையில் வேகமாக ஜீப் ஓட்டி வேன் மீது மோதிய போலீஸ் ஏட்டு, எஸ்ஐயுடன் தகராறு‘ என்ற தலைப்பில் வந்துள்ள செய்தி.
திண்டுககல் சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் டிரைவர் பணியில் இருப்பவர் ஏட்டு பெரியசாமி. இவர் நேற்று முன் தினம் இன்ஸ்பெக்டரை அழைத்து வருவதற்காக ஜீப்பை எடுத்து கொண்டு சென்றுள்ளார். போகும் வழியில் டாஸ்மாக் கடையை பார்த்ததும் அவருக்கு சபலம். ஆசை தீர மது குடித்து விட்டு, போதையில் வேகமாக ஜீப் ஓட்டியிருக்கிறார். அப்போது ஒரு மினிவேன் மீது மோதி விட்டார். அத்துடன் விடவில்லை. ஜீப்புக்கு சேதம் ஏற்பட்டதாக கூறி, மினிவேன் டிரைவரிடம் ரூ.2000 கேட்டு தகராறு செய்தார். அப்போது கூட்டம் கூடவே, போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் பறந்து, ரங்கநாயகி என்ற பெண் எஸ்.ஐ. வந்திருக்கிறார். அவர் வருவதை பார்த்த ஏட்டு, ஜீப்பை எடுத்து கொண்டு மீண்டும் வேகமாக பறந்தார். அப்போது ஒரு தள்ளு வண்டி கடை மீது ஜீப் மோதி, சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. கடைசியில் மேலும் சில போலீசார் வந்து, ஏட்டு பெரியசாமியை பிடித்து சென்றனர்.
இந்த செய்தி, படிப்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்கலாம். காவல்துறையை பற்றி இதை விட சுவார சியமான செய்தி நாளையே கூட வெளிவரலாம். ஆனால், காவல் துறை எந்த அளவுக்கு மோசமாக போய் கொண்டிருக்கிறது என்பதை நினைத்து வேதனைப்பட வேண்டியிருக்கிறது. உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் இது பற்றி சிந்திக்க வேண்டும். கஜானாவை நிரப்புவதற்காக இலக்கு வைத்து மது விற்பனையை அதிகரித்து கொண்டே செல்லும் அரசுக்கு தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய கடமை தங்களுக்கு உண்டு என்பதையும் அவர்கள் மறக்கக் கூடாது. கிழக்கிந்திய கம்பெனியை விட மோசமாக, லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அரசு செயல்படக் கூடாது. இதை பொறுப்பில் உள்ள அதிகாரிகள் துணிச்சலுடன் சுட்டிக்காட்டும் காலத்தை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.