அரக்கோணம்:தமிழகத்தில் மின் கட்டணம் குறித்து எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்ப மின் பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மின் அளவை கணக்கிடும் அதிகாரிகள் மீட்டரில் காண்பிக்கப்பட்ட அளவை சர்வரில் பதிவு செய்யும் போதே, வாடிக்கையாளர்களுக்கு தானாகவே எஸ்எம்எஸ் மூலம் தகவல் சேர்ந்து விடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செல்போனில் வரும் தகவலில் வாடிக்கையாளரின் மின் இணைப்பு எண், செலுத்த வேண்டிய மின்சார கட்டண விவரம், இவற்றை செலுத்த வேண்டிய தேதி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இருக்கும். இதற்காக, மாநிலம் முழுவதும் மின் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோரிடம் இருந்து செல்போன் எண்களை பெற்று அதனை பதிவு செய்யும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மின் பகிர்மான வட்டங்களில் சுமார் 25 சதவிகிதத்துக்கு மேல், வாடிக்கையாளர்களின் செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மீதம் உள்ள செல்போன் எண்களை திரட்டி, பதிவு செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இத்திட்டம், 2014ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், விவசாய மின் இணைப்பை தவிர்த்து, சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் செல்போன் எண்கள் பதிவு செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. விரைவில் இந்த பணி நிறைவடையும். மேலும், மின் கட்டணத்தை செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டும் விதமாக கடைசி தேதிக்கு 3 நாட்களுக்கு முன்பாக மீண்டும் ஒரு நினைவூட்டல் எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என்றார்.