நாட்டுக்கு தலைவர் யார்? அரசியல்வாதிகளுடன் விவாதம் நடத்த தயார் கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி
சென்னை:நாட்டுக்கு நான்தான் தலைவர் என அரசியல்வாதி கூறினால் அவருடன் விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்.ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
விஸ்வரூபம் 2ம் பாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் ஏற்கனவே சொன்னதுபோல் நான் நாட்டைவிட்டு வெளியேறுவேன். பொழுதுபோக்குகள் சமுதாயத்தை எப்படி வழிநடத்த உதவுகின்றன என்கிறார்கள். சமூகம்தான் பொழுதுபோக்கை வழிநடத்துகிறது. சமூகத்தில் உள்ளதைதான் பொழுதுபோக்கு அம்சங்கள் பிரதிபலிக்கின்றன. ‘தென்னிந்திய நடிகர்கள் பலர் அரசியலில் இருப்பதுபோல் கமல்ஹாசன் 2014ம் ஆண்டு அரசியலுக்கு வருவாரா? என்கிறார்கள். கமல்ஹாசனுக்கு பார்வையாளர்கள் மட்டுமே தேவை. ஆனால் என்னை மனநல அலுவலகத்துக்குள் தள்ள முயற்சிக்கிறீர்கள். எப்போதுமே நான் வித்தியாசமாக செய்பவன். குறிப்பிட்ட விஷயத்தில் எதற்காக மற்றவர்கள் செய்ததைப்போல் நானும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.
5 வருடத்துக்கு ஒருமுறை எனது அரசியல் பணியை செய்துகொண்டுதான் இருக்கிறேன். அது தொழில் ரீதியானதல்ல. ஓட்டு போடும்போது ஒவ்வொருவரும் அதை தனது குரலாக யோசித்து உறுதியாக எதிரொலிக்க வேண்டும். அதன்பிறகு, இலவசமாக நாங்கள் சேவை செய்கிறோம் என்று சொல்லும் அரசியல் தொழில் தெரிந்தவர்களிடம் அந்த பொறுப்பை விட்டுவிட வேண்டும். அரசியல்வாதிகளுக்கு நாம் நல்ல சம்பளம் தந்துவிட்டு நாட்டை நல்லமுறையில் வழிநடத்திச் செல்ல அவர்களிடம் கேட்க வேண்டும். அவர்கள் நமது பிரதிநிதிகள்தான். தயவுசெய்து அவர்களை தலைவர்கள் என்று எண்ணிவிடாதீர்கள். மக்கள்தான் தலைவர்கள். எந்த அரசியல்வாதியாவது நான்தான் தலைவர் என்றால் அவர்களுடன் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன்.இவ்வாறு கமல் கூறினார்.