ஈரோடு:ஈரோட்டில் இருந்து நேற்றிரவு 7 மணிக்கு அரசு பஸ் காரைக்கால் புறப்பட்டது. நாகூரை சேர்ந்த குழந்தைவேலு (47) என்பவர் பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் 45 பயணிகள் இருந்தனர். பஸ் ஈரோடு அரசு மருத்துவமனையை தாண்டியதும் டிரைவர் குழந்தைவேலு உடல்நிலை திடீரென மோசமானது. அவரது கை, கால்கள் செயல் இழந்தன. நிலைமையை உணர்ந்த குழந்தைவேலு மிகவும் சிரமப்பட்டு திடீர் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார்.
நடுரோட்டில் பஸ் நின்றதால் பயணிகள், டிரைவரிடம் விசாரித்தனர். அதிர்ச்சியுடன் இருந்த டிரைவர் தனது கை, கால்களை அசைக்க முடியவில்லை. செயல் இழந்தது போல் உள்ளது என்றார். உடனே அவரை ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மாற்று பஸ்சில் பயணிகள் புறப்பட்டு சென்றனர். சாமர்த்தியமாக டிரைவர் குழந்தைவேலு செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அதில் இருந்த 45 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.