நேற்று அதிகாலை செங்கல்பட்டில் ஒரு விபத்து.. பரனூர் டோல்கேட் அருகே பாலத்தில் பழுதாகி நின்ற கார் மீது சென்னையில் இருந்து திருச்சி சென்ற அரசு பஸ் மோதியது. அதன்பின் திருவண்ணாமலை பஸ் மோதியது. அதன்பின், தனியார் கம்பெனி பஸ் மோதியது. அப்போது, திருவண்ணாமலை பஸ் நகர்ந்து திருச்சி பஸ் மீது மோத, திருச்சி பஸ் மீண்டும் கார் மீது மோத நடுவில் பேசிக் கொண்டிருந்த திருச்சி பஸ் டிரைவர் ஓமலூரை சேர்ந்த சீனிவாசன், மயிலாடுதுறை வாழையூரை சேர்ந்த கண்டக்டர் இருதயராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து விட்டனர்.
லண்டனில் நேற்று ஒரு காட்சி.. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் என்று.. உலகளவில் பிரபலமானவர் ஹிலாரி கிளின்டன். விருது வாங்க லண்டன் சென்றார். அரங்கத்தின் வெளியில் சாலையோரம் காரை நிறுத்தினார் டிரைவர். விருது வாங்கி கொண்டு வெளியில் வந்த ஹிலாரிக்கு ரூ.7,885 ரூபாய் அபராதம் விதித்து கறாராக நடந்து கொண்டார் லண்டன் போலீஸ்காரர்.
இந்த 2 சம்பவங்களும் போக்குவரத்து விதிகள் சம்பந்தப்பட்டதுதான். முதல் சம்பவத்தில், பழுதாகி நின்ற கார் மீது பஸ் மோதியதும் உடனடியாக ரோந்து போலீசார் வந்து, பின்னால் வரும் வாகனங்களை எச்சரித்து மெதுவாக செல்ல நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், ஒரு மணி நேரம் கழித்துதான் வந்திருக்கிறார்கள். அல்லது அதிகாலை நேரம், பாலத்தில் விளக்குகள் இல்லை.. இருட்டு.. போக்குவரத்து இல்லை. இந்த நேரத்தில் வாகனங்கள் கட்டுப்பாடான வேகத்தில் வந்திருந்தாலும் விபத்தை தடுத்திருக்கலாம். ஒரு பஸ் வேகமாக வந்துவிட்டது என்றால் கூட ஆறுதல் சொல்லி கொள்ளலாம். 3 பஸ்கள் படுவேகத்தில் வந்து ஒன்றன் பின் ஒன்றாக மோதியதை விதி என்று சொல்லி தப்பிக்க முடியாது.
சாதாரணமாக தடுக்கப்பட்டிருக்க வேண்டிய அசம்பாவிதம், அலட்சியத்தால் 2 உயிர்களை பலி வாங்கி விட்டது. இரண்டாவது சம்பவத்தில் விவிஐபி என்று கூட பார்க்காமல் (நம்ம ஊரில் அப்படிதான் பார்க்கிறார்கள்) சட்டப்படி நடந்து கொண்டுள்ளார் போலீஸ்காரர். டிரைவிங் லைசென்ஸ் பெற சிங்கப்பூர் உள்பட பல நாடுகளில் கடுமையான எழுத்து தேர்வு உள்ளது. அதை பாஸ் செய்வதற்கே திறமை வேண்டும். அந்தளவுக்கு இல்லாவிட்டாலும், போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகளும், கடமையை போலீசாரும் யோசித்தால் நேற்று 2 உயிர்கள் பறிபோனது போல் இனியும் பறிபோகாது. குறைந்தபட்சம் எண்ணிக்கையையாவது குறைக்கலாம்.