சென்னை:தர்மபுரியில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாளை விற்க முயன்ற 4 பேரை தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சுமார் 20,000 காலியாக உள்ளன. அந்த இடங்களில் ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்காக 12 லட்சம் விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மே மாதம் 31ம் தேதி முதல் வினியோகம் செய்தது. சுமார் 6 லட்சம் இடைநிலை மற்றும் பட்டதாரிகள் டிஇடி தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.
இந்நிலையில் தகுதியுள்ளவர்களுக்கான ஹால் டிக்கெட், கடந்த 6ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்கள்) தேர்வுக்கு 2 லட்சத்து 71 ஆயிரத்து 909 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்காக தமிழகம் முழுவதும் 687 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது. தேர்வை கண்காணிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
மேலும், பள்ளி கல்வி துறையை சேர்ந்த இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் 32 பேர் மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர முதல் தாள் தேர்வு பணிக்காக 29,000 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வுகளில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கீழ் தளங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையற்றவர்கள் சொல்வதை எழுதுவற்காக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தர்மபுரி டவுன் பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இருவர், தர்மபுரியை சேர்ந்த இருவர், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள் அதற்கான விடைகள் அடங்கிய பட்டியலை ஜெராக்ஸ் போட்டு விற்க முயன்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி எஸ்பி அஸ்ரா கார்க் உத்தரவின்படி போலீசார் விரைந்து சென்று 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை தர்மபுரி டவுன் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.